தமிழ்நாட்டிற்கு வந்தே பாரத் சிறப்பு ரயில்! அதுவும் இந்த மாதத்திலேயே! 3 மாநில பயணிகளுக்கு குட் நியூஸ்
சென்னை: தமிழ்நாட்டிற்கு மேலும் ஒரு வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. அதுவும் வரும் ஜூலை 31 ஆம் தேதியில் இருந்து இந்த ரயில் இயக்கப்படுகிறது. இதன் மூலம் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநில பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த ரயில் எந்த வழியாக, எந்த நேரத்தில் இயக்கப்படுகிறது என்பது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த 2019- ஆம் ஆண்டு வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த ரயிலுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது நாடு முழுவதும் 55 க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன. நவீன தொழில்நுட்பம், பயணிகளுக்கு கூடுதல் வசதிகள், பாதுகாப்பு வசதிகள், குளிர்சாதன வசதி, வேகம் உள்ளிட்டவைகளால் இந்த வந்தே பாரத் ரயில்கள் பயணிகள் விரும்பி பயணம் செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சென்னை - கோவை, சென்னை - நெல்லை, சென்னை - மைசூர், கோவை - பெங்களூர் உள்ளிட்ட வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலை குறைக்கும் விதமாக அவ்வப்போது வந்தே பாரத் சிறப்பு ரயிலாகவும் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சேலம் வழியாக கேரள மாநிலம் எர்ணாகுளம் - கர்நாடகாவின் பெங்களூர் கண்டோன்மெண்ட் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
இது தொடர்பாக ரயில்வே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டதாவது:- வந்தே பாரத் சிறப்பு ரயில் (06001) வரும் 31 ஆம் தேதி முதல் ஆகஸ்டு 25 வரை புதன், வெள்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் இருந்து மதியம் 12.50 மணிக்கு புறப்பட்டும். இந்த ரயில், திருச்சூர், பாலக்காடு, போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மாலை 6.33 மணிக்கு சேலம் ஜங்க்ஷன் வந்தடையும்.
சேலத்தில் இருந்து 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10 மணிக்கு பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையம் வந்தடையும். மறு மார்க்கத்தில் பெங்களூர் கண்டோன்மெண்ட் - எர்ணாகுளம் வந்தே பாரத் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06002) வருகிற ஆகஸ்டு 1 தேதி முதல் ஆகஸ்டு 26 ஆம் தேதி வரை வியாழன், சனி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் இயக்கப்படும்.
பெங்களூர் கண்டோன்மெண்ட் ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.58 மணிக்கு சேலம் வந்தடையும். சேலத்தில் இருந்து 9 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர் வழியாக மதியம் 2.20 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையம் சென்றடையும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. கேரளாவின் எர்ணாகுளத்தில் தொடங்கி தமிழகம் வழியாக கர்நாடகாவின் பெங்களூருக்கு இந்த ரயில் இயக்கபடுவதால் 3 மாநில பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications