ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. சோனியா, ராகுல் பிரச்சாரத்திற்கு வருவார்களா? தினேஷ் குண்டுராவ் பதில்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்ற விவரத்தை கட்சி மேலிடம் தான் அறிவிக்கும் என்று தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். மேலும் சோனியா, ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவார்களா? என்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த திருமகன் ஈவெரா மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 27-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.
தி.மு.க. கூட்டணியில் இந்த தொகுதி மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
" /> ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு
சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனை கூட்டம்
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று இரவு காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.வி.தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் எம்.பி., முன்னாள் எம்.பி. கிருஷ்ணமூர்த்தி உள்பட மூத்த நிர்வாகிகள் பங்கேற்றனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி காணொலி வழியாக இந்த கூட்டத்தில் பங்கேற்றார். சுமார் 1 மணி நேரம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
வேட்பாளர் யார்?
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் சத்தியமூர்த்தி பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். தினேஷ் குண்டுராவ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக்குப் பிறகு தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சோனியா, ராகுல் காந்தி..
ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். இடைத்தேர்தல் என்பதால் சோனியா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பிரசாரத்திற்கு வர வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் நிர்வாகிகள், கூட்டணி கட்சித் தலைவர்கள் பிரசாரம் செய்வார்கள். காங்கிரஸ் வேட்பாளரை கட்சி மேலிடம் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
விருப்ப மனு அளித்த சஞ்சய் சம்பத்
முன்னதாக ஈவிஎஸ் இளங்கோவன் இன்று காலை மகன், சஞ்சய் சம்பத்துடன் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு வருகை தந்தார். இதையடுத்து தினேஷ் குண்டுராவிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து சஞ்சய் சம்பத் மனு கொடுத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சம்பத், வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும். விருப்ப மனு கொடுத்திருக்கிறேன்" என்றார்.
பிரச்சாரத்தை தொடங்கிய திமுக
ஈரோடு கிழக்கு தொகுதியை பொறுத்தவரை கடந்த முறை அ.தி.மு.க கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் போட்டியிட்டது. ஆனால், இந்த முறை அதிமுக போட்டியிட விருப்பம் தெரிவித்ததால் ஜிகே வாசன் அதற்கு ஒப்புதல் தெரிவித்தார். இதனால், அதிமுக போட்டியிடுவது உறுதியானது. முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வமும் அ.தி.மு.க சார்பாக வேட்பாளரை நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். பாஜக இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜக போட்டியிட்டால் ஆதரவு அளிப்பதாக ஓ பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் கூட்டணி கட்சிகளை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக கூட்டணி பிரசாரத்தை தொடங்கிவிட்டது.