ஒன்று பட்டால் உண்டு வாழ்வு..பேச தயார்..இணைய அழைக்கும் ஓபிஎஸ்..நிராகரித்த இபிஎஸ் அணி
சென்னை: பழனிச்சாமி அணியுடன் பேச தயாராக உள்ளதாக கூறியுள்ள ஓ.பன்னீர் செல்வம், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று கூறியுள்ளார். ஒற்றுமையாக செயல்படவே விரும்புவதாகவும் ஒருபோதும் இரட்டை இலை முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார். அதே நேரத்தில் ஓ.பன்னீர் செல்வத்தின் அழைப்பை எடப்பாடி பழனிச்சாமி அணி நிராகரித்துள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சியினர் பரபரப்பாக செயல்பட ஆரம்பித்து விட்டனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி வேட்பாளரை நிறுத்துவோம் என அறிவித்துள்ளது.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போட்டியில் இருந்து விலகிக் கொண்டது. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அதிமுக போட்டியிட விட்டுக்கொடுத்து விட்டதாக ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமி அணி சார்பில் வேட்பாளராக யார் களமிறங்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது. அதே நேரத்தில் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர் செல்வம், ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தலில் தங்கள் சார்பில் தனியாக வேட்பாளர் நிறுத்தப்பட உள்ளதாக கூறினார். அதிமுக சார்பில் தாங்கள் போட்டியிடுவோம் என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இரட்டை இலை சின்னம் கோரி படிவத்தில் தான் கையெழுத்து போடுவேன் என்றும் கூறினார்.
இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டால் இந்திய தேர்தல் ஆணையம் அளிக்கும் வேறு சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார். அனைவருடனும் ஒற்றுமையாக இணைந்து செயல்பட விரும்புவதாகவும் கூறிய ஓபிஎஸ், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்று கூறினார். இரட்டை இலை சின்னம் முடங்க ஒருபோதும் நான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.
பிரிந்தவர்கள் இணைய வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் அழைப்பு விடுத்த நிலையில் அதனை எடப்பாடி பழனிச்சாமி அணி நிராகரித்துள்ளது. தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒருபோதும் ஓ.பன்னீர் செல்வம் அணியுடன் இணைய தயாராக இல்லை என்று கூறினார். ஓ.பன்னீர் செல்வம் அரசியலில் தனிமரமாகிவிட்டார் என்றும் அவரது பேட்டியில் விரக்தி வெளிப்படுவதாகவும் ஜெயக்குமார் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications