சிறுமியின் விருப்பத்துடனேயே உறவு வைத்திருந்தாலும் ஏற்க முடியாது.. போக்சோ வழக்கில் ஐகோர்ட் தீர்ப்பு
சென்னை: "சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் உறவு வைத்திருந்தாலும் இதனை ஏற்க முடியாது" என்று கூறிய சென்னை ஐகோர்ட் போக்சோ வழக்கில் இளைஞருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது.
சென்னையை சேர்ந்த இளைஞர் சதீஷ் குமார். 25 வயதான இவர் சிறுமியை காதலித்துள்ளார். அந்த சிறுமியும் சதீஷ் குமாரை காதல் செய்துள்ளார். இந்த நிலையில் ஒரு நாள் சிறுமியை திருத்தணி கோவிலுக்கு அழைத்து சென்று சதீஷ்குமார் திருமணம் செய்துகொண்டார்.

இதையடுத்து சிறுமியை ஒகேனக்கல் அழைத்து சென்று அங்கு தங்க வைத்துள்ளார். அப்போது இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்தனர். மேலும் அப்போது சிறுமியுடன் சதீஷ்குமார் உடலுறவு வைத்துள்ளார். இதற்கிடையே சிறுமியை காணவில்லை என பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து போலீசில் ஆஜர் ஆகிய சிறுமி நடந்ததை கூறினாள். இதனை தொடர்ந்து சிறுமி பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இதனால் சதீஷ் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்தது.
இந்த வழக்கை சென்னை போக்சோ கோர்ட் விசாரித்து வந்தது. விசாரணை முடிந்து கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது சதீஷ்குமாருக்கு கோர்ட் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதையடுத்து சதீஷ்குமார் தரப்பில் 10 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின் போது சதீஷ்குமார் தரப்பு வக்கீல் பல்வேறு தரப்பு வாதங்களை முன்வைத்தார். தொடர்ந்து இந்த வழக்கு இன்று நீதிபதி ஹேமலதா முன்னிலையி விசாரணைக்கு வந்தது. அப்போது சதீஷ்குமார் தரப்பு வக்கீல், "சிறுமியினுடைய விருப்பத்தின் பேரில் தான் மனுதாரர் உறவு வைத்துள்ளார். எனவே மனுதாரருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' என்று கூறினார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, "பாதிக்கப்பட்ட சிறுமி மைனர். எனவே சிறுமியின் விருப்பத்தின் பேரில் தான் மனுதாரர் உறவு வைத்துக்கொண்டதாக கூறுவதை ஏற்க முடியாது. தற்போது அந்த சிறுமிக்கு வேறொரு நபருடன் திருமணம் நடந்துள்ளது. முன்பு மனுதாரர் சிறுமியிடம் நடந்து கொண்டது எப்போதும் அவருக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும்.
மனுதாரர் கடுமையான குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கிறார். மனுதாரருக்கு 25 வயது ஆகிறது. சிறுமியுடன் உறவு கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் என்ன என்பதை அவர் அறியாமல் இருக்க முடியாது. எனவே, மனுதாரருடைய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு விதிக்கப்பட்டிருந்த 10 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்படுகிறது" என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.












Click it and Unblock the Notifications