ரூ.1,59000 கோடி கடன்..நஷ்டம்..5 இணைப்புகள் வைத்திருந்தாலும் இலவச மின்சாரம் தொடரும்.. செந்தில் பாலாஜி
சென்னை: ஒருவர் 5 மின் இணைப்புகள் வைத்திருந்தாலும் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி அளித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளதாக கூறிய செந்தில் பாலாஜி நஷ்டத்தில் இயங்கும் மின் வாரியத்தை சீரமைக்கவே ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.
தமிழகத்தில் இலவச மின்சாரம், மானிய மின்சாரம் பெறும் நுகர்வோர்கள் தங்களின் ஆதார் எண்ணை மின் நுகர்வோர் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. டிசம்பர் 31ம் தேதி வரை இந்த சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அந்தவகையில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைக்கப்பட்டுள்ள முகாமை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு செய்தார்.
மின் கட்டணம் செலுத்த கூட ஆதார் இணைப்பது கட்டாயமா? இலவச மின்சாரம் குறித்தும் செந்தில் பாலாஜி விளக்கம்

ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்
செய்தியாளர்களை சந்தித்த அவர், " மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கு சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்வதற்கும் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறினார்.
ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்தாகிவிடும் என பலர் உண்மைக்கு மாறான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.

மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு
மின்துறையை மேம்படுத்தவே மின் இணைப்புடன் ஆதார் இணைக்கப்படுகிறது. எனவே, பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதால் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது.
நடைமுறையில் இருக்கும் அனைத்து இலவச மின்சார திட்டம், மானியம் தொடரும். வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் மின்சாரம் ரத்து செய்யப்படாது.

ரூ.1,59000 கோடி கடன்
ஒருவர் 5 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, 100 இணைப்பு வைத்திருந்தாலும் சரி, தற்போதுள்ள நடைமுறையே தொடரும். பல மின் இணைப்புகளை ஒரே ஆதாரில் இணைத்துக்கொள்ளலாம். தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூ.1 லட்சத்து 59 ஆயிரம் கோடி கடன் உள்ளது. கடந்த ஆண்டு மட்டும் ரூ.11 ஆயிரம் கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது.

ரூ.15 லட்சம் ஆதாருடன் இணைப்பு
தமிழகத்தில் மொத்தம் உள்ள 2.33 கோடி நுகர்வோர்களில் இதுவரை 15 லட்சம் பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியயுள்ளார்.