அதை விஜய் கிட்ட போய் கேளுங்க.. எதிர்க்கட்சி தவெகவா? பிரஸ்மீட்டில் கடுகடுத்த அதிமுக எடப்பாடி
சென்னை: 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக தவெக இடையேதான் போட்டி இருக்கும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் விஜய் பேசினார். விஜய்யின் இந்த பேச்சுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி அளித்த பேட்டியின் விவரங்களை பார்க்கலாம்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை மக்களே எங்களுக்கு அங்கீகாரம் கொடுத்துவிட்டார்கள் என்றும், விஜய் அப்படி பேசினால் அதை அவரிடமே போய் கேளுங்கள் என்று கூறினார்.

விஜய் பேசியதற்கு எடப்பாடி பதில்
தமிழகத்தில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றிக் கழகம் இடையே தான் போட்டி என்று விஜய் அடித்து கூறுவதாக பேசியது குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "அவருடைய கருத்தை சொல்கிறார். தொண்டர்களை உற்சாகப்படுத்த அப்படி சொல்கிறார். நாட்டில் எல்லா கட்சி தலைவர்களும் கட்சி வளர்வதற்காக தொண்டனை உற்சாகப்படுத்த, குஷிப்படுத்த அவர்கள் கருத்தை சொல்வார்கள். எல்லாரும் அப்படித்தான் சொல்வார்கள்" என்றார்.
எதிர்க்கட்சி யார்
தமிழக வெற்றிக் கழகம் தேர்தலில் கூட போட்டியிடவில்லை ஆனால் திமுகவுக்கு போட்டியாக அந்த கட்சி தான் இருக்கும் என்று விஜய் பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி, "இந்த கேள்வியை அவர் கிட்ட தான் கேட்க வேண்டும். நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி என்பதை நீங்களும் சொல்லிவிட்டீங்க.. மக்களும் சொல்லிவிட்டாங்க.. மக்களே அங்கீகாரமும் கொடுத்து இருக்கிறார்கள். எனவே இந்த கேள்வியை நீங்க அவரிடம் தான் கேட்க வேண்டும்" இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
அதிமுக தலைவர்களை விஜய் புகழ்வது ஏன்
தொடர்ந்து விஜய்யின் நேற்றைய மாநாட்டில் அதிமுக தலைவர்களை பற்றி புகழ்ந்து மற்றும் மேற்கோள் காட்டி பேசியது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த எடப்பாடி, "எங்க தலைவர்கள் அப்படி இந்த நாட்டை ஆண்டு இருக்கிறார்கள். இன்று எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் என்றாலும் சரி, புதிதாக கட்சி ஆரம்பிப்பவர்களாக இருந்தாலும் சரி.. எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் எம் ஜி ஆர், ஜெயலலிதா. இதனால் தான் விஜய் கோடிட்டு காட்டியிருக்கிறார்" என்றார்.
விஜய் என்ன பேசினார்
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், மத்திய மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக இதுவரை மத்தியில் ஆளும் பாஜகவும், தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவையும் நேரடியாக பெயர் குறிப்பிடாமல் விஜய் பேசி வருவதாக எழுந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்றைய அவருடைய பேச்சு இருந்தது.
முத்துவேல் கருணாநிதி என்றும், மோடி ஜி என்றும் நேரடியாக பெயரை சொல்லியே பேசினார். நான் ஒரு படத்தில் பேசுவேனே... லியோவ பாக்கனும்.. லியோவ பாக்கனும்னு அந்த சீன் தான் நியாபகம் வருது. நீங்க தானே கேட்டீங்க.. இந்தாங்க வச்சுக்கோங்க என்று விஜய் பேசினார். மேலும், படிக்கிற பிள்ளைகள், சின்னப் பொண்ணுங்க, வேலைக்கு போகிற பொண்ணுங்க, வீட்டில் இருக்கிற பொண்ணுங்க என்று இவர்கள் எல்லாருக்கும் நடக்கிற கொடுமைகளை சொல்ல முடியவில்லை சார். உங்களை அப்பான்னு வேற கூப்பிடுறதா சொல்றீங்க..
பெண்களே முடிவு கட்டுவாங்க
தினம் தினம் கொடுமைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிற தமிழ்நாட்டு பெண்கள் தான் உங்களின் ஆட்சிக்கு முடிவு கட்ட போகிறார்கள். உங்களின் அரசியல் வாழ்க்கைக்கே ஒரு முடிவு கட்டப்போகிறார்கள். எல்லாருக்கும் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான்.. காற்று, மழை, வெயில் இயற்கையை யாராலும் கட்டுப்படுத்த முடியாதோ... அதுபோல் எம் மக்களுக்கான அரசியலையும், வெற்றியையும் யாராலும் தடுக்க முடியாது.
வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழகம் இதுவரை பார்க்காத வித்தியாசமான தேர்தலை சந்திக்கும் என்றும் விஜய் பேசினார். மேலும் அந்த தேர்தலில், இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே இருக்கும். ஒன்று தவெக இன்னொன்று திமுக. நம்பிக்கையோடு இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்" இவ்வாறு விஜய் பேசினார்.












Click it and Unblock the Notifications