"எல்லா அம்மாவும் ஒரு நாள் செத்துதான் போவாங்க, அதுக்கு?" லீவ் கேட்ட சென்னை வங்கி ஊழியருக்கு அதிர்ச்சி
சென்னை: அம்மா இறந்துவிட்டார் என லீவ் கேட்ட ஒரு வங்கி ஊழியருக்கு உயர் அதிகாரி சொன்ன பதில் அதிர்ச்சியைக் கொடுப்பதாக இருக்கிறது. அதாவது அந்த ஊழியர் லீவ் கேட்டதற்கு.. எல்லோருடைய அம்மாவும் தான் இறப்பார்கள். டிராமா போடாதே என மிரட்டியுள்ளார். மேலும், உடனடியாக ஆபீஸ் சேரவில்லை என்றால் சம்பளத்தைப் பிடித்துக் கொள்வேன் என்றும் மிரட்டியிருக்கிறார்.
இந்த காலத்தில் பெரும்பாலான அலுவலகங்களில் மருத்துவ ரீதியாக விடுப்பு கேட்கும்போது பெரிய கெடுபிடி இல்லாமல் கொடுத்துவிடுவார்கள். ஆனால், சில அலுவலகங்களில் உயர் அதிகாரத்தில் இருப்போர் மிக மோசமாக நடந்து கொள்வார்கள். நாம் கனவிலும் யோசிக்காத அளவுக்கு மிக மோசமாக அவை இருக்கும். அப்படியொரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

பகீர் சம்பவம்
யுகோ வங்கியின் உயர் அதிகாரி ஒருவர் தன்னிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்டதாகச் சொல்லி ஊழியர் ஒருவர் தலைமை நிர்வாகத்திற்கு அனுப்பிய மெயில் தொடர்பான ஸ்கிரீன்ஷாட் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அந்த மேனேஜரின் செயலை நெட்டிசன்கள் பலரும் மிகக் கடுமையாகச் சாடி வருகிறார்கள்.
இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் சென்னை மண்டலத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அந்த மெயிலேயே சென்னை மண்டலத் தலைவர் அளித்த மனிதாபிமானமற்ற பதில் குறித்து புகார்.. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ரொம்ப மோசம்
சென்னை மண்டலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நபர், மற்ற வங்கி ஊழியர்களை மிக மோசமாக நடத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சக பணியாளர்களை வங்கி ஊழியர்களைப் போல நடத்தாமல் அடிமைகளைப் போல நடத்துவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்தில் வேண்டும் என்றே ஒருவிதப் பயம் மற்றும் ஒடுக்குமுறை சூழ்நிலையை வளர்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அந்த அதிகாரி சர்வாதிகாரி, உணர்ச்சியற்றவர் என்று அந்த மெயிலில் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. ஊழியர்களின் விடுப்புக் கோரிக்கைகள், அவை எமர்ஜென்சி லீவாக இருந்தாலும் கூட பல நேரங்களில் மறுக்கப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அம்மா இறக்க தான் போறாங்க
ஒரு வங்கி மேனேஜரின் தாய் ஐசியுவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவர் விடுப்பு கேட்ட போது, எப்போது மீண்டும் ஆபீசுக்கு வருவீர்கள் எனக் கேட்டு, அதை உறுதி செய்த பிறகே லீவ் கொடுத்துள்ளார். மற்றொரு முறை, இன்னொரு பேங்க் மேனேஜரின் தாய் இழந்துவிட்டார். ஆனால், அதற்குத் தலைவர் பதவியில் இருக்கும் அந்த நபர், "எல்லோருடைய அம்மாவும் தான் இறப்பார்கள். டிராமா போடாதே.. பிராக்டிக்கலாக இரு. உடனடியாக வேலைக்கு சேரு.. இல்லையெனில் சம்பளமில்லா விடுப்பில் போட்டுவிடுவேன்" என்று கூறி மிரட்டியுள்ளார். மேலும், இது தொடர்பாக எச்சரிக்கை கடிதத்தையும் கொடுத்துள்ளார்.
லீவ் இல்லையாம்
மேனேஜர் ஒருவரின் ஒரு வயது மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, இன்னொரு ஊழியர் மனைவிக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்படும்போது என எந்தவொரு எமர்ஜென்சி சூழல் என லீவ் கேட்டாலும் கொடுக்க மாட்டாராம். வீட்டில் எந்தவொரு சிக்கலாக இருந்தாலும் அதைக் கண்டுகொள்ளாமல் ஆபீசுக்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறார். இதுபோல லீவ் கேட்போரையும் அலட்சியமாகப் பேசியதாக அந்த மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நெட்டிசன்கள் ஆவேசம்
இந்த ஸ்க்ரீன்ஷாட் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும் இந்த மேனேஜரின் நடத்தை கொடூரமானது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கண்டித்துள்ளனர். ஒரு நெட்டிசன், "யாராக இருந்தாலும் மனிதாபிமானம் தேவை.. லீவ்க்கு என தனியாக ரூல்ஸ் இருக்கலாம்.. ஆனால், அதை எமெர்ஜென்சி காலத்திலும் அதை தராமல் பிறகு நியாயப்படுத்த முடியாது" என்று சாடினார்.
இதுவரை, யுகோ வங்கியோ அல்லது அதன் சென்னை மண்டல அலுவலகமோ இந்த குற்றச்சாட்டுகளுக்கு அதிகாரப்பூர்வமாக எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.












Click it and Unblock the Notifications