ஈரோடு கிழக்கு தேர்தலில் வெற்றி நிச்சயம்- முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் ஈவிகேஎஸ் இளங்கோவன்
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ந் தேதி நடைபெறும் ஈரோடு தொகுதி இடைத்தேர்தலில் திருமகன் ஈவெராவின் தந்தையும் மூத்த காங்கிரஸ் தலைவருமான முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என காங்கிரஸ் மேலிடம் அறிவித்துள்ளது.
முன்னதாக தாம் தேர்தலில் போட்டியிடவில்லை; இளைய மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு கேட்டுள்ளேன் என இளங்கோவன் கூறியிருந்தார். சென்னை வருகை தந்த காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவிடமும் சஞ்சய் சம்பத் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை கொடுத்திருந்தார்.
ஆனால் காங்கிரஸ் மேலிடமோ, ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளர் என அறிவித்தது. தமிழ்நாட்டில் ஆளும் திமுகவும், இளங்கோவனையே வேட்பாளராக அறிவிக்க விரும்பியதாகவும் கூறப்படுகிறது. திமுக ஏற்கனவே அமைச்சர்களை உள்ளடக்கிய தேர்தல் பணிக்குழுவை நியமித்துள்ளது.
இப்பின்னணியில் சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது: ராகுல் காந்தி, சோனியா காந்தி, மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் நான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என விரும்பினர். அவர்களது விருப்பத்துக்கு அடிபணிந்து நான் போட்டியிடுகிறேன். ஈரோடு கிழக்கு தொகுதியில் ஏற்கனவே திமுகவினர் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். அமைச்சர்கள் நேரு, முத்துசாமி உள்ளிட்டோர் பிரசாரத்தை மேற்கொண்டதற்கு நன்றி.
தமிழ்நாடு முதல்வ மு.க.ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றனர். இந்த நம்பிக்கை காரணமாக இடைத்தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரியையும் சந்திக்க இருக்கிறேன். அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் சந்தித்து பேச உள்ளேன். மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனை சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பிரசாரத்துக்கு முதல்வர் ஸ்டாலின் வரவேண்டும்; வருவார். எதிரணியினர் குழப்பத்தில் உள்ளனர். இவ்வாறு ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. அதிமுகவினர் விருப்ப மனு வழங்கலாம்.. எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!