ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் விருப்ப மனு
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத், விருப்ப மனு கொடுத்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் மார்ச் 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா திடீரென காலமானார். இதனால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலமான திருமகன் ஈவெரா, மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன். இதனால் தற்போதைய இடைத்தேர்தலில் மற்றொரு மகன் சஞ்சய் சம்பத் போட்டியிட வாய்ப்பு தர வேண்டும் என்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.
சிங்கம் களம் இறங்கிருச்சு.. ஈரோடு இடைத் தேர்தலில் களமிறங்கும் கமல்ஹாசன்? நேராகப் பறந்த தீர்மானம்!
ஆனால் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ராஜன், தமக்குதான் சீட் கொடுக்க வேண்டும் என மல்லுக்கட்டுகிறார். இதேபோல் ஈபி ரவியும் சீட் கேட்டு வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் நேற்று சென்னை வந்தார்.
சென்னையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் தினேஷ் குண்டுராவ் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பங்கேற்றார். இன்று 2-வது நாளாக தினேஷ் குண்டுராவ் சென்னையில் வேட்பாளர் தேர்வு குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனுக்கு மகன், சஞ்சய் சம்பத்துடன் இளங்கோவன் இன்று காலை வருகை தந்தார். பின்னர் தினேஷ் குண்டுராவிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலி போட்டியிட விருப்பம் தெரிவித்து சஞ்சய் சம்பத் மனு கொடுத்தார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் சம்பத், வேட்பாளர் யார் என்பதை கட்சி மேலிடம் அறிவிக்கும்.விருப்ப மனு கொடுத்திருக்கிறேன் என்றார்.