Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஈவிகேஎஸ் இளங்கோவனின் கடைசி ஆசை.. மகன் சஞ்சய்யிடம் சொன்னது என்ன? கண் கலங்கி சொன்ன செல்வப்பெருந்தகை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: “சென்னையிலேயே என்னை அடக்கம் செய்யுங்கள், வீட்டிலேயே அஞ்சலிக்காக உடலை வையுங்கள்” என இறப்பதற்கு முன் தனது மகன் சஞ்சய் சம்பத்திடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஈவிகேஎஸ் இளங்கோவனின் மூத்த மகன் திருமகன் ஈவெரா கடந்த ஆண்டு மறைந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். இந்ந்தச் சூழலில் அடுத்த ஓராண்டில் இன்று ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமாகியுள்ளது அவரது குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுத்துள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன் - வரலட்சுமி தம்பதிக்கு சஞ்சய் சம்பத் என்கிற மகனும் உள்ளார்.

evks elangovan evks evks elangovan death

ஈவிகேஎஸ் இளங்கோவன் உடலுக்கு அஞ்சலி: ஈவிகேஸ் இளங்கோவன் மறைவால் அவரது குடும்பத்தினர், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மகனிடம் கூறிய இளங்கோவன்: இந்நிலையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் அவரது சொந்த ஊரான ஈரோட்டுக்கு கொண்டு செல்லப்படாதது ஏன்? அவரது உடல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு கூட கட்சியினர் அஞ்சலி செலுத்துவதற்காக கொண்டு செல்லப்படவில்லை ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளது. அதற்கு காரணம், ஈவிகேஎஸ் இளங்கோவன் தனது மகன் சஞ்சய் சம்பத்திடம் கூறிய இறுதி விருப்பம் தான் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது இதனை தெரிவித்தார். செல்வப்பெருந்தகை பேசுகையில், “ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் சென்னை மனப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் இருந்து கட்சித் தொண்டர்கள் அஞ்சலி செலுத்த வந்துகொண்டிருக்கிறார்கள். நாளை காலை டெல்லியில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள் வருகை தருகின்றனர். நாளை 2 மணிக்கு மேல் மனப்பாக்கம் மின் மயானத்தில் அவரது உடல் தகனம் நடைபெறும்.

ஈவிகேஸ் இளங்கோவனின் இறுதி விருப்பம்: ஈரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு உடலை எடுத்துச் செல்ல திட்டமிட்டிருந்தோம். ஆனால், ஈவிகேஸ் இளங்கோவன் தனது மகனிடம் ஏற்கனவே சொல்லி இருக்கிறார். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது, நான் இறந்ததும் சென்னையிலேயே நமது வீட்டிலேயே அஞ்சலிக்கு வைத்து சென்னையிலேயே என்னை அடக்கம் செய்யுங்கள் என அவரது மகனிடம் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார். அதை அவர் எங்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் இங்கேயே தகனம் செய்கிறோம். அவரது விருப்பத்தை நிறைவேற்றுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

செல்வப்பெருந்தகை இரங்கல்: மேலும், செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருமுறையும், மத்திய அமைச்சராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றிய ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (டிச.14) காலை சுமார் 10.20 மணியளவில் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

தமது இளமைப் பருவம் முதல் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டு, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைத்து தனித்துவமிக்க இயக்கமாக காங்கிரஸ் கட்சியை மாற்றிய பெருமை அவருக்கு உண்டு. அவர் தலைவராக செயலாற்றிய போது, அன்றைய ஆட்சியாளர்களை எதிர்த்து குரல் கொடுத்து அரசியல் பேராண்மையோடு பணியாற்றி காங்கிரஸ் கட்சிக்கு வலிமை சேர்த்தவர்.

தனது கருத்துகளை பொதுவெளியில் துணிச்சலாக கூறக் கூடியவர். தமிழக காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல், தமிழக மக்களின் பேரன்போடு, அனைத்து அரசியல் கட்சியினரின் நன்மதிப்பையும், ஆதரவையும் பெற்றவர். தந்தை பெரியாரின் பேரன் என்பதோடு, தமிழக காங்கிரசில் முக்கிய தலைவராக இருந்த சொல்லின் செல்வர் ஈ.வெ.கி. சம்பத்தின் மகன் என்ற பெருமை ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு உண்டு. இந்த பாரம்பரியத்தில் வந்த அவர், சமீபத்தில் ஈரோடு கிழக்கு, சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார்.

நாளை சென்னையில் உடல் தகனம்: தமிழக காங்கிரஸ் தொண்டர்களால் தன்மானத் தலைவர் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளங்கோவன் இழப்பு என்பது காங்கிரஸ் பேரியக்கத்துக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழக காங்கிரசின் ஒரு தூண் சாய்ந்து விட்ட உணர்வோடு மிகுந்த வேதனையில் இருக்கிறேன். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், காங்கிரஸ் பேரியக்க நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் இன்று (டிச.14) பிற்பகல் 2 மணி முதல் வைக்கப்படும். நாளை (டிச.15) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+