ஈவிகேஎஸ் இளங்கோவன் அபார முன்னிலை.. ஆனால்.. காற்றுவாங்கும் சத்யமூர்த்தி பவன்
காங்கிரஸ் கட்சி மாநில தலைமையகம் இன்னும் திறக்கப்படாமல் இருக்கிறது.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை பெற்றுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைமையகம் இதுவரை திறக்கப்படாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தபின் நடைபெறும் முதல் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போதும், அலுவலகம் திறக்கப்படாமல் இருப்பது அக்கட்சியினரிடையே விமர்சனத்தைப் பெற்று வருகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடந்தது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

ஈரோடு இடைத்தேர்தல்
அங்குள்ள அறையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, பூட்டி சீல் வைக்கப்பட்டன. ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் என 450க்கும் மேற்பட்டோர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

வாக்கு எண்ணிக்கை
மொத்தம் 16 மேஜைகளில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தரைதளத்தில் 10 மேசைகளும், முதல் தளத்தில் 6 மேசைகளும் என 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மேசைகளிலும் 2 அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர் ஆகியோர் வாக்குகளை எண்ணும் பணியை மேற்கொள்கின்றனர். ஒவ்வொரு மேசையிலும், வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை
இந்த தேர்தலில் பதிவான தபால் வாக்குகள் முதலில் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,374 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தென்னரசு 447 வாக்குகளும் பெற்றுள்ளனர். முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருக்கிறார்.

காத்து வாங்கும் அலுவலகம்
இந்த நிலையில் சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையகம் இதுவரை திறக்கப்படாமலேயே இருக்கிறது. பிரச்சாரத்தின் போதே திமுக தலைவர்களே அதிகமாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட நிலையில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் நிதானமாக பணியாற்றி வந்தனர். அதற்கேற்ப வாக்கு எண்ணிக்கை நாளிலும் இதுவரை காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறக்கப்படாமல் காத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. இது அக்கட்சித் தொண்டர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications