எக்ஸ் காதலி கையில் அந்த பொருள்.. திடீர்னு காதலன் வீட்டு சோபாவில் உட்கார்ந்து.. பதறிப்போன மனைவி
சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகரில் (முன்னர் அவுரங்காபாத்), முன்னாள் காதலனின் மனைவியை ஒரு பெண் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தின் விசாரணையை போலீசார் நடத்தி வந்தாலும், இது தொடர்பான அதிர்வலைகள் இன்னும் அப்பகுதி மக்களிடமிருந்து நீங்கவில்லை.. அதை பற்றி இங்கே சுருக்கமாக பார்ப்போம்.
சத்ரபதி சம்பாஜிநகரின் வாலுஜ் பகுதியில் உள்ளது பஜாஜ் நகர்.. இங்கு 'சாய் ஸ்ரத்தா பார்க்' என்ற அப்பார்ட்மென்ட் உள்ளது.. இந்த குடியிருப்பில்தான், இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

43 வயதான ஷைலா சோனார் என்ற பெண், மகேந்திரா என்ற நபரை காதலித்து வந்தார்.. பிறகு அந்த காதல் கைகூடவில்லை என்றே தெரிகிறது.. இதனால் ஆத்திரமடைந்த காதலி சோனார், கையில் கூர்மையான ஆயுதங்களுடனும், துப்பாக்கி அதாவது ஏர் பிஸ்டல் எடுத்துக் கொண்டும் முன்னாள் காதலனான மகேந்திராவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.
அப்போது வீட்டில் மகேந்திராவின் 42 வயது மனைவி சாதனா சோன்பேத்கர், அவரது 65 வயது மாமியார் கேசர்பாய் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.
சோபாவில் ஷைலா
காதலன் வீட்டிற்குள் நுழைந்ததுமே, வரவேற்பறையில் இருந்த சோபாவில் உட்கார்ந்தார் ஷைலா.. இதைப் பார்த்த கேசர்பாய், "யார் நீங்கள்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு ரூமுக்குள் இருந்து வெளியே வந்த சாதனா, ஷைலாவை அடையாளம் கண்டு அதிர்ச்சி அடைந்தார்..
இங்கே எதுக்கு வந்திருக்கீங்க என்று கேட்டு ஷைலாவிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், திடீரென ஷைலா தனது கையில் இருந்த ஏர் பிஸ்டலை எடுத்து சாதனாவின் தலையில் வைத்து மிரட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கடும் மல்யுத்தம் ஏற்பட்டது. இந்த போராட்டத்தின்போது பிஸ்டல் 2 முறை கீழே விழுந்துள்ளது. சுதாரித்துக்கொண்ட மாமியார் கேசர்பாய், அந்த பிஸ்டலை எடுத்து ஜன்னல் வழியாக வெளியே வீசினார்.
மிளகாய் பொடி தூவிய ஷைலா
ஆயுதம் கைநழுவியதால் ஆத்திரமடைந்த ஷைலா, தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து சாதனா மற்றும் கேசர்பாய் ஆகிய இருவரின் முகத்திலும் அடித்துள்ளார். இதனால் அவர்கள் கண்கள் எரியத் தொடங்கி செயலிழந்த நிலையில், ஷைலா தான் வைத்திருந்த பெரிய கத்தியால் சாதனாவை சரமாரியாக குத்தத் தொடங்கினார்.
சாதனாவின் தலை, கழுத்து, முதுகு மற்றும் முகம் என உடல் முழுவதும் பலமுறை குத்தியுள்ளார். இந்த தாக்குதலின் வீரியம் எவ்வளவு கொடூரமானது என்றால், சாதனாவின் முகம் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைக்கப்பட்டது. அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
சம்பவ இடத்திற்கு விரைந்த மிட்க் வாலுஜ் காவல்துறையினர், முதல் தளத்தில் இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது கொலையாளி ஷைலா அந்த வீட்டிற்குள்ளேயே பதுங்கியிருந்ததைக் கண்டு அவரை கைது செய்தனர். தாக்குதலின் போது ஷைலாவின் கைகளிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் கமிஷனர் பிரவீன் பவார் இது குறித்து சொல்லும்போது, "ஷைலா சோனார் 2017-ல் கணவரை பிரிந்து தனது 2 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மகேந்திராவுக்கும் அவருக்கும் இடையே முன்பு ஒரு உறவு இருந்துள்ளது. திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாகவும், பண மோசடி செய்ததாகவும் மகேந்திரா மீது கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் ஷைலா புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த முன்விரோதம் மற்றும் பணத்தகராறு காரணமாகவே இந்த கொலை நடந்துள்ளது" எனத் தெரிவித்தார்.
பாவம் அந்த 2 குழந்தைகள்
கொல்லப்பட்ட சாதனாவுக்கு 2 டீனேஜ் குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் மகேந்திரா வாலுஜ் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
பட்டப்பகலில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொடூர கொலை அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷைலா பயன்படுத்திய ஆயுதம் சமையலறை கத்தியை விட பெரியது என்பதால், அவர் திட்டமிட்டே இந்த கொலைக்கு வந்துள்ளார் என்பதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.














Click it and Unblock the Notifications