ராஜ்யசபா சீட் கிடைக்காத விரக்தியில் கோகுலஇந்திரா... திமுகவுக்கு தாவ முடிவு...?
சென்னை: அதிமுகவில் ராஜ்யசபா சீட் கிடைக்காததால் தலைமை மீது வருத்தத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திராவும் ஒருவர்.
கடந்த முறையே தன்னை இ.பி.எஸ். மாநிலங்களவைக்கு அனுப்பிவைப்பார் என எதிர்பார்த்த கோகுல இந்திரா இந்த முறை தனக்கு எப்படியும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தார்.
ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் கூட்டணிக் கட்சித் தலைவரான ஜி.கே.வாசனுக்கு ஒரு சீட் கொடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது அதிமுக.

மகளிரணி
அதிமுக மகளிரணியில் செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவை பொறுத்தவரை அரசியலில் மிகவும் ஆக்டிவாக இயங்கக்கூடியவர். சென்னையில் நடைபெறும் கட்சி தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளிலும் தவறாது கலந்துகொள்ளக் கூடியவர். 2011-2016 காலகட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சராக இருந்த அவர், ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்று 2016 தேர்தலில் மீண்டும் அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

ராஜ்யசபா சீட்
கோகுல இந்திராவின் சொந்த கிராமம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நிலையில் அவரது கணவர் ஊரான சிவகங்கையை மையமாக வைத்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 1990-களில் சிவகங்கை மாவட்ட அதிமுகவின் அதிகார மையமாக திகழ்ந்த ராஜகண்ணப்பன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். ஒரு கட்டத்தில் சசிகலாவின் நேரடி அறிமுகம் கிடைத்த பின்னர் 2001-ல் ராஜ்யசபா சீட் கொடுக்கப்பட்டு ஜெயலலிதாவால் மாநிலங்களவைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

நிராகரிப்பு
இந்நிலையில் மீண்டும் தற்போது ராஜ்யசபா சீட் எதிர்பார்த்து அதற்கான காய்களை நகர்த்தி வந்தார் கோகுல இந்திரா. விஜிலா சத்யானந்த் பதவிக்காலம் முடிவதால் அவரது இடத்தில் பெண்கள் கோட்டாவில் தனக்கு சீட் உறுதியாக கிடைக்கும் என மிகுந்த நம்பிக்கையில் இருந்தார் கோகுல இந்திரா. அதிமுக தலைமையும் அவர் பெயரை ஏறத்தாழ தேர்வு செய்துவிட்டதாகவே தகவல்கள் வெளியாகின. ஆனால் கடைசி நேரத்தில் வாசன் பெயர் டிக் அடிக்கப்பட்டு கோகுல இந்திரா பெயர் நிராகரிக்கப்பட்டது.

கட்சி தாவல்?
இந்த ஏமாற்றம் கோகுல இந்திராவுக்கு அதிமுக தலைமை மீது மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக விரக்தி நிலையில் உள்ளார். இந்நிலையில் அவரை திமுகவில் இணையுமாறு ஆரம்பகால அரசியல் ஆசான் ராஜகண்ணப்பன் அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் அதுகுறித்து கோகுல இந்திரா எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஏற்கனவே 6 மாதங்களுக்கு முன்பும் கோகுல இந்திரா திமுகவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை அப்போது கோகுல இந்திரா மறுத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications