அரைநிர்வாணம் சரியா? அடித்து சொன்ன அரசு தரப்பு! ஜெயக்குமாருக்கு 15 நாள் சிறை -கோர்ட்டில் என்ன நடந்தது
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுத்து சென்னை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Recommended Video
நேற்று இரவு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டு பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் திமுக நிர்வாகி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
ஜெயக்குமார் தன்னுடைய வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்த போது உள்ளே புகுந்த போலீசார் அவரை கைது செய்தனர். பட்டினப்பாக்கத்தில் உள்ள அவரின் வீட்டில் வைத்து போலீசார் மூலம் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.

என்ன நடந்தது?
சென்னை சஞ்சீவிராயன் கோவில் தெருவில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நகர்ப்புற தேர்தலின் போது நேராக சென்று சோதனைகளை செய்தார். அப்போது காமராஜர் மெட்ரிக்குலேசன் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் இருந்த திமுக நிர்வாகி ஒருவரை அமைச்சர் ஜெயக்குமாரின் ஆட்கள் தாக்கினர். அவரின் மேலாடையை நீக்கி கையை கட்டி நகர்வலமாக கூட்டி சென்று தாக்கினார்கள். அவர் கள்ள ஓட்டு போட வந்தவர் என்று கூறி அவர் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது
இதையடுத்து தி.மு.க.வைச் சேர்ந்த நரேஷ் என்பவர் இது தொடர்பாக புகார் அளித்தார். அதனால் நேற்று காலை ஜெயக்குமார் மீது வழக்கு பதியப்பட்டது. அவரோடு சேர்த்து மேலும் 40 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில்தான் நேற்று இரவு ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கிழக்கு மண்டல இணை ஆணையர் பிரபாகரன், மாதவரம் துணை ஆணையர் சுந்தரவனம் ஆகியோர் அடங்கிய 40 பேர் கொண்ட படை ஜெயக்குமாரை கைது செய்து அழைத்து சென்றது.

ஆஜர்
இதையடுத்து சென்னை எழும்பூர் நீதிபதிகள் குடியிருப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்ற 15வது நீதித்துறை நடுவர் முரளி கிருஷ்ண ஆனந்த் வீட்டில் ஆஜர்படுத்தப்படுத்தப்பட்டார். இரவு 12 மணிக்கு பின்பாக இவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதில் ஜெயக்குமார் தரப்பு வைத்த வாதத்தில், ஜெயக்குமாரை கைது செய்ததில் முறையான சட்ட விதிகள் பின்பற்றப்படவில்லை. அவர் மீது பொய் வழக்கு போடப்பட்டு உள்ளது. அவர் யார் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்தவில்லை. இது பழிவாங்கும் நடவடிக்கை, என்று வாதம் வைக்கப்பட்டது.

ஆதாரம்
இதற்கு அரசு தரப்பு, ஜெயக்குமார் மற்றும் அவரின் ஆட்கள் தேர்தல் நேரத்தில் ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கி உள்ளனர். ஜெயக்குமார் சொல்லி, அவர் தூண்டி விட்டுத்தான் இது நடந்துள்ளது. இதற்கான வீடியோ உள்ளது. அந்த வீடியோவில் அவரும் இருக்கிறார். முறையாக விதிமுறைகளை பின்பற்றித்தான் இந்த நடவடிக்கையை எடுத்தோம் என்று வாதம் வைத்தனர். ஜெயக்குமார் கைது சரிதான் என்று அரசு தரப்பு இந்த வாதத்தில் குறிப்பிட்டது.

ஏற்றுக்கொண்டது
அரசு தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலையில் உடனடியாக நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தரப்பு ஜாமீன் மனு தாக்கல் செய்தது. ஆனால் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட். இன்று அதிகாலை ஜாமீன் வழங்கினால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று அரசு தரப்பு வாதம் வைத்தது. எனவே ஜாமீன் விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்ட்டு உள்ளது. சென்னை எழும்பூர் மேஜிஸ்டிரேட் முன் நாளை ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications