எங்கள் ஆட்சியில் ஒரு சொட்டு மழைநீர்கூட தேங்கவில்லை.. ஆனால் இப்போது என்ன நிலை? ஜெயக்குமார் பாய்ச்சல்
சென்னை: அதிமுக ஆட்சியில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த டிசம்பர் மாதம் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை என்று குறிப்பிட்ட ஜெயக்குமார், ஒரு நாள் மழைக்கே தாங்காத இந்த அரசு பெருமழையை எப்படிச் சமாளிக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்,
தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் தொடங்கி கனமழை பெய்து வருகிறது. மேலும், அங்கு ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
நேற்று மிகவும் குறுகிய காலத்தில் அதிக மழை கொட்டித் தீர்த்ததால், பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கும் நிலை ஏற்பட்டது. நிலைமை சமாளிக்க அரசு தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

ஜெயக்குமார் ஆய்வு
இந்நிலையில், சென்னை ராயபுரம் தொகுதிக்குட்பட்ட ஆடுதொட்டி பகுதியில் மழையால் உயிரிழந்த குடும்பத்தாரை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேரில் சந்தித்தார். மேலும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளையும் அவர் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், அதிமுக ஆட்சியில் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கடந்த டிசம்பர் மாதம் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

ஒரு நாள் மழைக்கே தாங்கவில்லை
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஒரு நாள் மழைக்கே திமுக அரசு தாங்கவில்லை, திண்டாடுகிறது. இந்த நிலையில் இவர்கள் பெருமழையை எப்படிச் சமாளிப்பார்கள் பொதுவாக வானிலை ஆய்வு மையம் கொடுக்கும் எச்சரிக்கையை வைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக எடுக்க வேண்டும். அப்படி தான் டிசம்பர் மாதம் பெருமழை பெய்த போது தமிழ்நாடு அரசு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தது.

நடவடிக்கை இல்லை
அதிமுக ஆட்சியில் மழை வெள்ள காலங்களில் அரசு சிறப்பாகச் செயல்பட்டது. அதனால் தான் அப்போது பெரியளவில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை, ஆனால் இப்போது ஜெனரேட்டர்கள், மோட்டார்கள் என எதுவும் போதுமான அளவுக்கு பேக்அப் வைக்கப்படவில்லை. இதனால் பல இடங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டும் கூட அதைக் காற்றில் பறக்கவிட்டுள்ளனர். தேவையான எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளவில்லை. வானிலை ஆய்வு மையம் எச்சரித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து மக்களை அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
Recommended Video

முதல்வர் தொகுதி
11 மணிக்கு மேல் தான் முதல்வரும், அமைச்சரும் வெளியே வந்துள்ளனர். அதற்கு முன் தேவையான எந்தவொரு முன்னெச்சரிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால் சென்னை இன்று வெள்ளக்காடாக மாறியுள்ளது. குறிப்பாக, முதல்வரின் கொளத்தூர் தொகுதியிலேயே நிலைமை மிக மோசமாக உள்ளது. வெள்ள நீரும், கழிவுநீரும் குடிநீருடன் கலந்துவிட்டது. ஆனால் திமுக அரசு மந்தமாக உள்ளது. கடந்த டிசம்பரில் எங்கும் இந்த அளவுக்கு நீர் தேங்கவில்லை.

தாழ்வான பகுதிகளில் வசிப்போர்
ஏரி திறக்கும்போது, கனமழை பெய்யும்போது தாழ்வான பகுதிகளில் இருப்போர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களான பள்ளிகள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு உணவும் அளிக்கப்படும். ஆனால் திமுக அரசு தாழ்வான பகுதிகளில் இருப்போரைக் காப்பாற்ற எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒருசொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை
மழைநீர் முறையாகச் செல்ல சென்னையில் உள்ள ஆறுகளை முறையாகத் தூர்வார வேண்டும், வெள்ளநீர் வடிகாலை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதையெல்லாம் செய்யாததால் தான் இப்போது இடுப்பளவு நீர் சூழ்ந்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கவில்லை. ஆனால் இப்பொழுது மக்கள் படகு சவாரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு என்றும் விடியாத அரசாகவே இருக்கிறது" என்று தெரிவித்தார்.

டிடிவி தினகரன்
மேலும், அதிமுகவை மீட்டெடுப்பது தான் என் குறிக்கோள் என்று தினகரன் கூறியிருப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர், "முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படும் கதைதான் இது. ஒருகாலும் அவர் அதிமுகவை மீட்டெடுக்க முடியாது. அதிமுக இப்போது வெற்றி நடை போடுகிறது. அப்படிப்பட நிலையில் சாதாரண தினகரனால் என்ன செய்ய முடியும். அவர் ஏற்கனவே, தனியாக அமமுக என்ற கட்சியைத் தொடங்கியுள்ளார். மேலும் ஜெயலலிதாவே, டி.டி.வி.தினகரனை போயஸ் தோட்டம் பக்கமே வரக்கூடாது என்று துரத்தினார். அவர் கனவு என்றும் பலிக்காது" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications