எடப்பாடி நிகழ்ச்சியை புறக்கணித்த செங்கோட்டையன்! அதிருப்தி கோகுல இந்திரா! ஜெயக்குமார் விளக்கம்
சென்னை: அத்திக்கடவு அவினாசி திட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது குறித்தும் கோகுல இந்திரா அதிருப்தி குறித்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விளக்கமளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: அத்திக்கடவு- அவிநாசி திட்டம் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் 80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. மீதமுள்ள 20 சதவீத பணிகள்தான் திமுக ஆட்சியில் நடந்தது.

ஆனால் அதிமுகவுக்கு பெயர் வந்துவிடுமோ என்பதற்காக 20 சதவீத பணிகளை காலம் தாழ்த்தி முடித்துள்ளனர். எனவே அத்திக்கடவு திட்டம் முடிந்ததற்கு காரணம் முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும்தான். அத்திக்கடவு அவிநாசி திட்ட விவசாயிகள் கூட்டமைப்பில் எல்லா கட்சியை சேர்ந்த விவசாயிகளும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் நடத்திய பாராட்டு விழா அது. விவசாய கூட்டமைப்பினர் நடத்திய நிகழ்வில் அரசியல் கலப்பு இருக்கக் கூடாது.
இதற்காகவே தலைவர்களின் படங்கள் வைக்கப்படவில்லை. பாராட்டு விழாவை அதிமுக ஏற்பாடு செய்யவில்லை என்றார். அது போல் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், உள் அரங்கில் நடந்த அதிமுக கூட்டத்தில் கோகுல இந்திரா வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
அவர் மேடையிலோ பொது இடங்களிலோ பேசவில்லை. கட்சிக்காரர்கள் மத்தியில்தான் பேசியிருக்கிறார். எனவே அது குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை. அவருடைய மனக்குறை எதுவாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமியிடம் முறையிடலாம் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள அஞ்சப்பள்ளியில் அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சங்கம் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் பெயர் அச்சிடப்பட்டும் அவர் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து ஈரோட்டில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியிருந்ததாவது: அத்திக்கடவு அவிநாசி திட்ட நிகழ்ச்சியின் அழைப்பிதழ், டிஜிட்டல் பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் பாராட்டு விழாவில் கலந்து கொள்ளவில்லை. நாங்கள் எம்ஜிஆரால் வளர்க்கப்பட்டவர்கள், எங்களை அடையாளம் காட்டியவர் ஜெயலலிதா. அவர்களுடைய புகைப்படம் இடம்பெறாமல் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மட்டும் இடம் பெற்றிருந்ததால் நான் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றார்.
அது போல் அதிமுகவில் இருக்கும் அதிருப்தியை மற்றொரு முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் அதிமுக கள ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில் கோகுல இந்திரா பேசுகையில் இது போல் ஒரு கூட்டம் நடைபெறுவதாக எனது ஓட்டுநர்தான் என்னிடம் சொன்னார், அவர்தான் என்னிடம் நோட்டீஸை கொடுத்தார்.
நான் அந்த நோட்டீஸை பார்க்கவில்லை, கூட்டத்திற்கு செல்லலாம் என மட்டும் அவரிடம் கூறியிருந்தேன். இந்த கூட்டத்திற்கான அழைப்பை யாரும் என்னிடம் நேரடியாக கொடுக்கவில்லை. ஒற்றுமையும் நேர்மையும் அனைத்து இடங்களிலும் அவசியமாக இருக்க வேண்டும்.
என்னை பார்த்ததும் வணக்கம் சொல்லக் கூட சிலர் பயப்படுகிறார்கள். என் புகைப்படத்தை பேனரில் போடுவதில்லை. தென் சென்னை பொறுப்பாளராக எனக்கு பதவி வழங்கிய பின்னர், என்னால் எந்த விதமான பிரச்சினையும் ஏற்பட்டு விடக் கூடாது என நானே நாகரீகமாக ஒதுங்கி கொண்டேன். நான் குழு அமைத்து செயல்படுவதில்லை, நான் கேட்பது அடிப்படை மரியாதை மட்டுமே.
என்னை சந்தித்தாலோ என் பெயரை பேனரில் போட்டாலோ அவர்களின் பதவி பறிபோய் விடுமோ என அச்சப்படுகிறார்கள். யாருக்கு சீட் கொடுக்க வேண்டும் என முடிவு செய்வது கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் எடப்பாடி பழனிசாமிதான். எனது பெயரை போடக் கூடாது என்று முடிவு செய்யும் அளவிற்கு அப்படி என்ன நிர்பந்தம் ஏற்பட்டது?" என அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications