முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை எம்பி பதவி?
சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மாநிலங்களவை எம்பி பதவி கொடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்ட 6 எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைய போகிறது. திமுகவின் ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், ராஜேஷ் குமார், அதிமுகவின் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், நவநீத கிருஷணன், விஜயகுமார் ஆகியோரின் பதவிக்காலம் தான் முடிவடைய போகிறது.
இதனால் ஜூன் மாதம் இந்த காலிபணியிடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் பலத்தைப் பொருத்து ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு 34 அல்லது 36 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.

திமுகவுக்கு 3 எம்பி பதவி
அந்த அடிப்படையில் திமுகவுக்கு 3 எம்பி பதவிகள், அதிமுகவுக்கு இரு எம்பி பதவிகள் கிடைக்கும். 6வதாக உள்ள எம்பி பதவியை காங்கிரஸ் திமுகவிடம் கேட்டு பெறும் என தெரிகிறது. இந்த நிலையில் திமுகவில் 3 பதவிகள் யாருக்கு என்ற போட்டி இப்போதே தொடங்கிவிட்டதாம்.

ராஜ்யசபா எம்பி பதவி
அது போல் ஒரே ஒரு ராஜ்யசபா எம்பி பதவிக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்கள் போட்டியிடும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இந்த சீட்டை பெற தற்போது எம்பியாக உள்ள ஒருவர் இப்போதே காய் நகர்த்தி வருகிறார் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக சார்பில் இரு பதவிகளில் யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரேஸில் ஜெயக்குமார்
இந்த இரு பதவிகளுக்கு கோகுல இந்திரா, பொன்னையன், செம்மலை உள்ளிட்டோர் போட்டியிட்டு வருகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ரேஸில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைந்த போது பிரஸ்ஸை சந்திப்பதே ஜெயக்குமார்தான்.

நெருக்கடி
எத்தனையோ நெருக்கடி நேரத்தில் ஜெயக்குமார் சாதுர்யமாக பதில் சொல்லி பிரஸ் மீட்டையே கூல் ஆக்கியுள்ளார். எந்த கேள்வி கேட்டாலும் கோபப்படாமல் சிரித்தபடியே பதில் சொல்வார். இவர் கடந்த சட்டசபை தேர்தலில் ராயபுரத்தில் தோல்வியடைந்தார். எனவே இந்த முறை இவருக்கு எம்பி பதவி வழங்கப்படலாம் என தெரிகிறது.

ஜெயக்குமாருக்கு எம்பி பதவியா
இந்த நிலையில் ஜெயக்குமாருக்கு எம்பி வழங்கப்படும் என்ற செய்தி காற்று வாக்கில் எல்லாருக்கும் கேட்டுவிட்டதாக தெரிகிறது. இதையடுத்து இதுகுறித்து ஜெயக்குமாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ அதுதான் இறுதி முடிவு. எல்லோரும் கட்சிக்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி என்ன பொறுப்பு கொடுத்தாலும் சரி, என்ன பணி கொடுத்தாலும் சரி, அதை மேற்கொண்டு சிறப்பாக செய்வதுதான் எல்லோருடைய முனைப்பும். எனவே இது கட்சி எடுக்கின்ற முடிவு என மறுப்பு தெரிவிக்காமல் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications