மீண்டும் திமுகவில் இணைகிறார் ராஜகண்ணப்பன்... வரும் 23-ம் தேதி மதுரையில் விழா
சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் வரும் 23-ம் தேதி தனது ஆதரவாளர்களுடன் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார்.
மதுரை ஒத்தக்கடை யானைமலை மைதானத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. அதனை மாநாடு போல் நடத்த திட்டமிட்டுள்ள ராஜகண்ணப்பன் தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் லட்சக்கணக்கில் ஆட்களை திரட்டி வந்து தனது செல்வாக்கை காட்டும் முயற்சியில் ராஜகண்ணப்பன் தீவிரம் காட்டி வருகிறார். இப்போது அவர் திமுகவில் இணைவது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தாரே தவிர அவர் அப்போது இணையவில்லை.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜகண்ணப்பன் ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். யாதவ சமுதாயத்தை சேர்ந்த இவருக்கு அந்த சமுதாய மக்களிடையே அபரிமிதமான செல்வாக்கு உள்ளது. எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து அதிமுகவில் இருந்த இவரை ஜெயலலிதா ஒரு கட்டத்துக்கு பிறகு ஓரம்கட்டத் தொடங்கினார். மேலும், அவருக்கு எதிராக பல வழக்குகளை அப்போது திமுக தொடர்ந்ததால் அதிமுகவை விட்டே வெளியேறி, தான் சார்ந்த யாதவ சமுதாய மக்களை ஒன்றிணைத்து அமைப்பை கட்டமைக்கும் முயற்சியில் இறங்கினார். இதனிடையே நிகழ்ந்த சில அரசியல் மாற்றங்களால் திமுகவில் இணைந்தார்.
ஆனால் இவர் எதிர்பார்த்தது போல் அங்கு ஏதும் இல்லாததால், மீண்டும் அதிமுகவுக்கு திரும்பினார். ஜெயலலிதாவும் இவரை வரவேற்று கடந்த 2009 நாடாளுமன்ற தேர்தலில் சிவகங்கை தொகுதியில் சீட் கொடுத்து ப.சிதம்பரத்தை எதிர்த்து போட்டியிட வைத்தார். அப்போது தேர்தல் முடிவு வெளியான அன்று, ராஜகண்ணப்பன் தான் தலைப்புச் செய்தியில் இடம்பிடித்தார். தனது வெற்றியை மறைத்து ப.சிதம்பரம் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இவரது குற்றச்சாட்டு டெல்லி வரை சென்று, இன்று பாஜகவினரால் அந்தக் குற்றச்சாட்டை முன்வைத்து ப.சிதம்பரம் விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் அல்லது சிவகங்கையில் சீட் எதிர்பார்த்த ராஜகண்ணப்பனுக்கு ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். சீட் தரவில்லை. இதனால் கோபத்தின் உச்சிக்கே சென்ற ராஜகண்ணப்பன் அடுத்த சில மணி நேரங்களில் அண்ணா அறிவாலயம் சென்று ஸ்டாலினை சந்தித்து திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால் அப்போது அவர் இணையவில்லை. சுமார் 6 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் திமுகவில் தனது ஆதரவாளர்களுடன் இணையவுள்ளார். இதனிடையே கட்சியில் முக்கிய பொறுப்பும், எம்.எல்.ஏ.சீட்டும் உறுதி என தெரிந்த பின்னரே ராஜகண்ணப்பன் திமுகவில் ஐக்கியமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications