Sengottaiyan: அமித்ஷாவை சந்தித்தேன்! ஏற்காடு எக்ஸ்பிரஸ் நேரத்தை மாற்ற சொன்னேன்! செங்கோட்டையன் தடாலடி
ஈரோடு: டெல்லியில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த போது அங்கு ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவும் இருந்தார், அவரிடம் ஈரோட்டிலிருந்து ஏற்காடு செல்லும் ரயிலின் நேரத்தை மாற்றுமாறும் கோரிக்கை விடுத்தேன் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அதிமுகவில் பெரும் சலசலப்பை உண்டாக்கியவர் செங்கோட்டையன். எம்ஜிஆர் காலத்து எம்எல்ஏ, ஜெயலலிதா காலத்து அமைச்சர்.. அதிமுக வரும் தேர்தலில் ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்றால், பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொள்ளவில்லை.

மாறாக செங்கோட்டையனின் பதவியை பறித்தார். செங்கோட்டையன், சசிகலா சொல்பேச்சை கேட்டு கட்சியில் பிரச்சினையை கிளப்புவதாக அதிமுகவின் தளவாய் சுந்தரம் உள்ளிட்டோர் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செங்கோட்டையன் பாஜகவினர்தான் தூண்டி விடுவதாகவும் சிலர் விமர்சிக்கிறார்கள். அதாவது அதிமுக ஒற்றுமையாக இருந்தால் தங்களுக்கு தேவையான கூடுதல் தொகுதிகளை கேட்டு பெற முடியாது, அதனால் அதிமுக வீக்காக இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்கி , அதை வைத்து காரியத்தை சாதிக்க பாஜக நினைப்பாகவும் அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர்.
இந்த நிலையில் செங்கோட்டையன் திடீர் பயணமாக டெல்லி சென்றார். அவரிடம் இது குறித்து கேட்ட போது "நான் ஹரித்துவார் சென்றுவிட்டு ராமரை தரிசிக்க போகிறேன்" என்றார். ஆனால் நேற்றைய தினம் அவர் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கோவை வந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டெல்லி பயணம் குறித்து கேட்ட போது, " நான் ஹரித்துவாருக்கு செல்வதாக இருந்தேன். ஆனால் டெல்லி சென்றதுமே அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. அப்படியே நிர்மலா சீதாராமனையும் சந்தித்தேன்.
அவர்களுடன் அரசியல் சூழல் குறித்து பேகிக் கொண்டிருந்தேன். எல்லாரும் ஒன்றிணைய வேண்டும் என்ற நோக்கத்திலும் இயக்கம் வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்திலும்தான் கருத்துகளை சொன்னதாக தெரிவித்தேன். என்னுடைய கருத்துகள் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவர்கள் இருவரையும் சந்தித்த போதுதான் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை சந்தித்தேன். அவரிடம் ஈரோட்டில் இருந்து ஏற்காடு செல்லும் ரயில் முன்கூட்டியே புறப்படுவதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகிறார்கள். அதன் நேரத்தை மாற்றினால் நன்றாக இருக்கும் என கூறினேன். அவரும் பரிசீலனை செய்வதாக தெரிவித்தார். இவ்வாறு செங்கோட்டையன் தனது பயண விவரங்களை தெரிவித்தார்.
செங்கோட்டையனின் இந்தப் பயணம், அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சி மோதலின் பின்னணியில் நிகழ்ந்துள்ளது.
- அதிமுகவின் பிரிந்து சென்ற அணிகளான சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைக்க வேண்டும் என செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார்.
- இதன் காரணமாக, அவர் கட்சியின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டார்.
- செங்கோட்டையனின் இந்த நிலைப்பாட்டிற்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்ததோடு, பலரும் கட்சிப் பொறுப்புகளில் இருந்து ராஜினாமா செய்தனர்.
செங்கோட்டையனின் இந்த திடீர் டெல்லி பயணம், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அதிமுகவில் ஒரு பிளவை ஏற்படுத்துமா அல்லது கட்சி ஒருங்கிணைப்புக்கு வழிவகுக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications