இங்கே இருக்கை போட்டிருக்கோம்! அங்கே கோடாரியோடு ஓபிஎஸ் போயிருக்காரு! இவர் அதிமுக விசுவாசியா? தங்கமணி
சென்னை: அதிமுக பொதுக் குழுவில் கலந்து கொள்ள இங்கே இருக்கை போடப்பட்டிருக்கிறது. ஆனால் ஓபிஎஸ்ஸோ கையில் கோடாரியுடன் தலைமை அலுவலகத்திற்கு போய் அங்கு அனைத்தையும் உடைத்து நொறுக்கியுள்ளார் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக் குழு கூடிய போது தலைமை அலுவலகத்திற்கு சென்ற ஓபிஎஸ்ஸை எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தினர். அப்போது பூட்டியிருந்த கதவை உடைத்துக் கொண்டு ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் உள்ளே சென்றனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசுகையில் வரலாற்று சிறப்பு மிக்க பொதுக் குழு கூட்டம் எதுவென்றால் சாமானியனும் அதிமுகவை சிறப்பாக வழிநடத்த முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டுதான் இது. தலைவர், தலைவருக்கு பின்னால் மகன், மகனுக்கு பின்னால் பேரன் என்றிருக்கும் கட்சிக்கு மத்தியில் அதிமுக தொண்டர்களால் நடத்தப்படுகிற இயக்கம்.

எம்ஜிஆர்
எம்ஜிஆரின் புன்னகையுடன் ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமையுடன் வந்த கழகத்தின் எதிர்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஒரு சாமானியர். எங்கோ ஒரு கிராமத்தில் பிறந்து, தொட்டதில் எல்லாம் வெற்றி பெற்றவர். ஒரு முதல்வரை யார் வேண்டுமானாலும சந்திக்கலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக சிறப்பாக பணியாற்றியவர் எடப்பாடி பழனிச்சாமி.

பொதுக் குழு
ஒவ்வொரு பொதுக் குழுவிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க பொதுக் குழு என நாம் கூறி வருகிறோம். ஆனால் இந்த பொதுக் குழுதான் வரலாற்றுச் சிறப்பு மிக்க பொதுக் குழு. தமிழகத்தில் முதல்வராக நான்கரை ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை கொடுத்த கட்சியின் விசுவாசி எடப்பாடி பழனிச்சாமி. இன்று கழகத்தின் இடைக்கால பொதுச் செயலாளராகியுள்ளார் என்றால் அவர் கடந்து வந்த பாதை சாதாரண பாதை அல்ல.

ஏற்ற இறக்கம்
எத்தனையோ கஷ்டங்கள், ஏற்ற இறக்கங்களை பார்த்துள்ளார். ஆனால் அத்தனைக்கும் பொறுமையாக இருந்து இன்று கழகத்தை வழிநடத்தும் வகையில் அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கடந்த மாதம் 14 ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் கோரிக்கை விடுத்தோம். இன்று திமுக ஆட்சியை வலிமையோடு எதிர்க்க வேண்டும் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமியால்தான் முடியும்.

பொறுப்பு
இந்த பொறுப்புக்கு வரவேண்டும் என அவர் நினைக்கவில்லை. மாவட்டக் கழக செயலாளர்கள், ஒன்றிய கழக செயலாளர்கள் முன் வைத்த கோரிக்கையின் அடிப்படையில்தான் அவர் இந்த பதவியை ஏற்றுள்ளார். இந்த பொதுக்குழுவை நிறுத்த வேண்டும் என்பதற்காக அதிமுகவை அழிந்து விடும் என ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் சொல்கிறார்கள்.

இருக்கை
இங்கே இருவருக்கும் (ஓபிஎஸ்ஸுக்கும் வைத்திலிங்கத்திற்கும்) இருக்கைகள் போடப்பட்டிருக்கிறது. ஆனால் இங்கே வந்து கருத்துகளை சொல்லாமல் கோடாரியுடன் அங்கே சென்று தலைமை கழகத்தை அடித்து உடைப்பதிலிருந்தே அவர்கள் உண்மையான அதிமுக தொண்டனா என்ற கேள்வி எழுகிறது.

ஒன்றரை கோடி தொண்டர்கள்
எடப்பாடி பழனிச்சாமியை மிகவும் இழிவாக எத்தனையோ முறை ஓபிஎஸ் தரப்பு பேசியுள்ளது. ஆனால் அதையெல்லாம் ஒன்றரை கோடி தொண்டர்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக எடப்பாடி பழனிச்சாமி பொறுமையாக இருந்தார். கொடநாடு எஸ்டேட் வழக்கில் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி விசாரணையை நடத்தி முடித்துவிட்டார். ஆனால் ஆட்சி மாற்றத்தின் காரணமாக பழிவாங்கும் நோக்கில் திமுக அதை மீண்டும் கையிலெடுக்கிறது. இந்த நிலையில் கொடநாடு வழக்கில் விசாரணை வேண்டும் என எதிர்தரப்பினர் கூறுகிறார்கள் என தங்கமணி பேசினார்.












Click it and Unblock the Notifications