அதிமுகவை சீண்ட வேண்டாம்! உங்க வாய்கொழுப்பை திமுகவிடம் காட்டுங்க! சீமானுக்கு ஜெயக்குமார் வார்னிங்!
சென்னை: அதிமுகவுடன் விளையாட வேண்டாம் என்றும் அதிமுக தலைவர்களை சீண்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்.
Recommended Video
மேலும் சீமான் தனது வாய்கொழுப்பை திமுகவிடம் வேண்டுமானால் காட்டிக் கொள்ளட்டும் என்றும் அதிமுகவிடம் காட்டக் கூடாது எனவும் ஜெயக்குமார் ஆவேசம் காட்டினார்.
ஜெயலலிதாவுக்கு கடலில் மேக் அப் சின்னம் வைப்பீர்களா என சீமான் பேசியதாக கூறிய ஜெயக்குமார், மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் போக்கை சீமான் முதலில் கைவிட வேண்டும் என அறுவுரையும் வழங்கினார்.

தீரன் சின்னமலை
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவுநாளான இன்று சென்னை கிண்டியில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்ட பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர்கள் சந்திப்பு
இந்த நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் சூடாக பேட்டியளித்தார். சீமான் அதிமுகவுடன் விளையாட வேண்டாம் என்றும் அதிமுக தலைவர்களை சீண்டினால் பின்விளைவுகள் கடுமையாக இருக்கும் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

வாய்க்கொழுப்பு
மேலும், சீமான் தனது வாய்கொழுப்பை திமுகவிடம் வேண்டுமானால் காட்டிக் கொள்ளட்டும் என்றும் அதிமுகவிடம் காட்டினால் நடப்பதே வேறு எனவும் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்தார். சீமான் மீதான ஜெயக்குமாரின் இந்த திடீர் கோபத்துக்குக் காரணம், இரண்டு நாட்களுக்கு முன்னர் சீமான் அளித்த பேட்டி ஒன்றே காரணமாகும். எம்.ஜி.ஆருக்கு தொப்பிச் சின்னத்தையும், அண்ணாவுக்கு மூக்குப்பொடி டப்பா சின்னத்தையும், ஜெயலலிதாவுக்கு மேக் அப் சின்னத்தையும் கடலில் வைப்பீர்களா என சீமான் கேட்டிருந்தார்.

ஆமைச் சின்னம்
இந்நிலையில் தான் அதிமுக சீமானுக்கு கடும் கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. சீமானுக்கு பிற்காலத்தில் அவரது கட்சிக்காரர்கள் ஆமைச் சின்னத்தை அமைப்பார்களா எனக் கேட்டு தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார் ஜெயக்குமார். அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பற்றி யார் பேசினாலும் அதிமுக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என கோபம் கொப்பளிக்க பேட்டியளித்தார் ஜெயக்குமார்.












Click it and Unblock the Notifications