அமித் ஷாவுக்கே ‘அல்வா’ கொடுக்கப் போகிறாராம் எடப்பாடி.. ஆரூடம் சொல்லும் மூத்த பத்திரிகையாளர்!
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பவில்லை என்றும், அமித் ஷாவுக்கு அவர் விபூதி அடிக்கவும் வாய்ப்பு உள்ளது என்றும் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் கூட்டணி குறித்த பேச்சுகள் தமிழ்நாடு அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. மார்ச் 25 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் டெல்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்திருந்தனர்.

கூட்டணி பேச்சு
இந்தச் சந்திப்பு நிறைவடைந்ததுமே, அமித் ஷா தமது எக்ஸ் பக்கத்தில் தமிழ்நாட்டில் 2026ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அமித் ஷா அதிமுக மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குள் வருவதை உறுதிப்படுத்தியிருக்கிறார் என பேச்சுகள் எழுந்தன.
அதேசமயம், எடப்பாடி பழனிசாமியோ, "2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 11 மாத காலமிருக்கு.. அதுக்குள்ள எப்படி கூட்டணி பற்றி பேசுவது. மக்கள் கோரிக்களை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில்தான் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தேன். கூட்டணி பற்றி நாங்கள் ஏதும் பேசவில்லை." எனக் கூறினார்.
எடப்பாடி பட்டும் படாமல்
இந்நிலையில், கூட்டணி தொடர்பாக அமித் ஷா சூசகமாக கருத்து தெரிவித்த நிலையிலும், அவருடன் கூட்டணி பற்றி பேசவில்லை என எடப்பாடி பழனிசாமி சொல்வது குறித்து மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ், நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
மூத்த பத்திரிகையாளர் ராஜகம்பீரன் அப்பாஸ் பேசுகையில், "'இக்கு' வைத்துப் பேசுகிறார் எடப்பாடி பழனிசாமி. பாஜக தலைமை என்ன டிமாண்ட் வைத்தது என்பது முக்கியம். ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை இணைப்பது பற்றியும் பாஜக தலைமை முயற்சிக்கும். ஓபிஎஸ், தினகரனை ஏற்க முடியாது என எடப்பாடி பழனிசாமி உறுதியாகச் சொன்னால் உங்கள் கூட்டணியில் அவர்கள் இல்லை, எங்களுடன் கூட்டணியில் இருக்கட்டும், எங்களிடம் சீட்டை கொடுத்துவிடுங்கள் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம் என்பார்கள். அப்படி நடந்தாலும் ஒரே மேடையில் நிற்க வேண்டி வரும். எடப்பாடி பழனிசாமிக்கு இப்படியான நெருக்கடி உள்ளது.

எடப்பாடி நிலைப்பாடு
மீண்டும் ஒருமுறை பாஜகவிடம் அதிமுகவை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி. என்ன ரெய்டு விட்டாலும் நான் பயப்பட மாட்டேன், கைதுக்கு ரெடி எனச் சொல்லும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. பேச்சுவார்த்தை முற்றுப் பெறாததால் இப்போது எடப்பாடி பழனிசாமி கூட்டணி விவகாரம் பற்றி பேசவில்லை என்கிறார்.
வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேர்தல் ஆணையம் ஆகிய மூன்றையும் அடியாள்களை போல வைத்து மிரட்டப் படுகிறார் எடப்பாடி பழனிசாமி. இப்போதும் பாஜக கூட்டணி என்பது எடப்பாடி பழனிசாமியின் விருப்பத் தேர்வு அல்ல. பாஜகவுடன் கூட்டணி பேசினோம் எனச் சொல்ல எடப்பாடி கூச்சப்படுவதற்கு காரணம் அதுதான். ஓபிஎஸ், டிடிவி தினகரன் போன்றோரை போல தான் பாஜகவையும் அவர் பார்க்கிறார்.
அமித்ஷாவுக்கு விபூதி
எடப்பாடி பழனிசாமி தந்திரங்கள், சூழ்ச்சிகள் அறிந்தவர். அவர் டெல்லி செல்வதே அதிமுகவின் பல முக்கிய தலைவர்களுக்கு தெரியாது. இந்த முறை போனபோதும் அவர் அதிமுக அலுவலகத்துக்கு செல்வதாகத்தான் சொல்லப்பட்டது. அமித் ஷாவை அவர் சந்திக்கத் திட்டமிட்டதே பலருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு ரகசியமாக வைத்திருந்தார்.
நாளை அமித் ஷாவையே சசிகலா போல தூக்கி எறியக்கூடும் என்பதிலும் ஆச்சர்யமில்லை. நான் எப்போது கூட்டணி பேசினேன் என பாஜகவுக்கு விபூதி அடிக்கவும் வாய்ப்பு உள்ளது. கூட்டணி என்பது பரிசீலனையில் இருக்கிறது. எங்கள் மீது ரெய்டு நடத்த வேண்டாம் என மறைமுக கோரிக்கை விடுத்து, அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களை பாதுகாக்கிறா எனச் சொல்லலாம். இன்னும் தேர்தலுக்கு ஓராண்டு காலம் இருக்கிறது. தேர்தல் நெருக்கத்தில் தான் இந்தக் கூட்டணி அமையுமா என்பது தெரியவரும்.
பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள் தான் இருக்கிறார்கள். அதை அதிகப்படுத்த நினைப்பார்கள். எனவே, சீட்களை பொறுத்தவரை பாஜகவுக்கு நிறைய கொடுக்கத் தேவையில்லை. அதிமுக அதிக இடங்களில் போட்டியிட முடியும் என்பது எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக இருக்கலாம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications