விஜயகாந்த் வென்டிலேட்டரில் இல்லை! 10 நாள்ல டிஸ்சார்ஜ்! ஆர்.கே. செல்வமணி தகவலால் தேமுதிகவினர் ஹேப்பி
சென்னை: விஜயகாந்துக்கு செயற்கை சுவாசமும் இல்லை, டிரக்கியாஸ்டமியும் செய்யவில்லை. அவராகவே சுவாசிக்கிறார் என தலைமை மருத்துவர் சொன்னதாக இயக்குநரும் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பிரத்யேக தகவலில் கூறியிருப்பதாவது: விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவரை நாங்கள் போய் சந்தித்தோம். அவரை பார்க்க முடியவில்லை. விஜயகாந்த் மனைவி பிரேமலதாவை சந்தித்தோம்.

பிறகு அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சந்தித்து விஜயகாந்தின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தோம். அந்த தலைமை மருத்துவர் கூறுகையில் " விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்படவில்லை, டிரக்கியாஸ்டமியும் செய்யவில்லை. சளி பிரச்சினைகளுக்கு மட்டும் மருந்து கொடுக்கப்படுகிறது.
மற்றபடி அவரே சுவாசிக்கிறார். இன்னும் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் வீடு திரும்புவார்" என மருத்துவர் தெரிவித்தார். வெளியே சொல்வது போல் விஜயகாந்தின் நிலை மோசமாக இல்லை என்பதை அறிந்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. எனவே யாரும் வதந்தி பரப்ப வேண்டாம் என செல்வமணி கேட்டுக் கொண்டார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த மாதம் 18-ஆம் தேதி முதல் சளி, காய்ச்சல், இருமல் தொடர்பாக அவர் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதனால் தொண்டர்கள், ரசிகர்கள், விஜயகாந்த் அபிமானிகள் எல்லாம் அதிர்ச்சியிலும் கண்ணீரிலும் ஆழ்ந்தனர். குவைத்தில் உள்ள ரசிகர் ஒருவர் விஜயகாந்துக்கு என்ன உறுப்பு வேண்டுமோ அதை நான் தருகிறேன் என கூறுகிறார். குழந்தைகள் எல்லாம் கேப்டன் நல்லா இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்கள்.
விஜயகாந்தின் உடல் நிலை குறித்து மியாட் மருத்துவமனை அறிக்கைகளை விட சமூகவலைதளங்களில் வரும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள்தான் அதிகம். அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் டிரக்கியாஸ்டமி சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறி வருகிறார்கள்.

ஆனால் டிரக்கியாஸ்டமி சிகிச்சை விவகாரத்தை மியாட் மருத்துவமனை மறுத்தது. அவருக்கு அழுத்தப்பட்ட ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டு வருவதாகவே தகவல் தெரிவித்தது. இந்த நிலையில்தான் அவருடைய உடல்நிலை எப்படி இருக்கிறது என்பதை அறிய நடிகர் சங்கத் தலைவர் நாசரும், ஃபெப்சி யூனியன் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணியும் மியாட் மருத்துவமனைக்கு சென்றனர்.
அங்கு நாசர் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில் விஜயகாந்த் நன்றாக இருக்கிறார். அவருடைய புலன்கள் அனைத்தும் செயலாற்றுகிறது. விரைவில் வீடு திரும்புவார் என தலைமை மருத்துவர் தெரிவித்ததாக மகிழ்ச்சியுடன் நாசர் தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications