EXCLUSIVE: அதிமுக, திமுகவிற்கு பின் இருந்த மாஸ்டர்மைண்ட்! தமிழக காங்.கில் களமிறங்கும் முக்கிய புள்ளி
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில அளவில் தங்களை பலப்படுத்தும் திட்டத்தில் இருக்கிறது. இதற்காக மிக முக்கியமான புள்ளி ஒருவரை கட்சிக்குள் களமிறக்க மாநில தலைமை நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தமிழ்நாடு அரசியலில் திமுக, அதிமுகவிற்கு அடுத்தபடியாக காங்கிரஸ்தான் மூன்றாவது பெரிய கட்சி. திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக அளவிலான ஆதரவு உள்ளது. ஆனால் தனித்து நிற்கும் பட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு இதே ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம்தான்.
இன்னொரு பக்கம் தமிழக காங்கிரஸ் கட்சியில் பல வருடங்களாக கோஷ்டி மோதல் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக புதிய தலைவரை தேர்வு செய்வதில் நிர்வாகிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.
உ.பி. தேர்தல்: காங்கிரஸ் சார்பில் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மாற்றம்
தற்போது தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி உள்ளார். சரியாக கடந்த 2019 லோக்சபா தேர்தலுக்கு முன்தான் இவருக்கு பதவி வழங்கப்பட்டது. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி மாற்றப்படுவது வழக்கம். கே எஸ் அழகிரி பதவிக்கு வந்து கிட்டத்தட்ட 3 ஆண்டு ஆக போகிறது. இதனால் தமிழ்நாடு சட்டசபை தேர்தல் சமயத்திலேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
புதிய தலைவர்
இந்த நிலையில்தான் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான ஆலோசனைகள் கடந்த சில மாதமாக தமிழ்நாடு காங்கிரசில் நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் எம்எல்ஏ கு.செல்வப்பெருந்தகை, எம்பி ஜோதிமணி, எம்பி செல்ல குமார் ஆகியோர் காங்கிரஸ் தலைவருக்கான ரேஸில் இருக்கிறார்கள். அதேபோல் விஜயதரணி, மாணிக் தாக்கூர், கார்த்தி சிதம்பரம் ஆகியோரும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆகும் முனைப்பில் இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் காங்கிரஸ் கட்சி புதிய ஆலோசகரை நியமிக்கும் முடிவில் இருக்கிறதாம்.
திமுக, அதிமுக
2011 சட்டசபை தேர்தலில் திமுகவிற்கு தேர்தல் பணிகளை செய்தவரும், கடந்த சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு தேர்தல் ஆலோசனை வழங்கியவருமான சுனிலை காங்கிரஸ் ஆலோசகராக நியமிக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமியின் பெயர் மாநிலம் முழுக்க கொண்டு செல்லப்பட சுனில் முக்கியமான காரணமாக இருந்தார். அதிமுக தோல்வி அடைந்து இருந்தாலும் அக்கட்சி எதிர்பார்த்ததை விட அதிக இடங்களை பெற்றது. ஜெயலலிதா இல்லாத நிலையில்.. எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுமை என்ற தோற்றம் ஏற்பட சுனிலின் மார்க்கெட்டிங் முக்கிய காரணமாக இருந்ததாக அப்போதே அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் வலம் வந்தன.
சுனில் காங்கிரஸ்
இந்த நிலையில்தான் சுனில் காங்கிரஸ் கட்சிக்காக பணிகளை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. ஒவ்வொறு மாநிலத்திலும் காங்கிரஸ் இது போல தேர்தல் ஆலோசகர்களை களமிறக்க உள்ளதாம். அதில் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திமுக, அதிமுகவிற்கு பணியாற்றிய சுனிலை இங்கு காங்கிரஸ் களமிறக்கும் என்று கூறுகிறார்கள். ஆனால் இவர் தேர்தல் பணிகள் மீது கவனம் செலுத்த போவதில்லை என்று கூறப்படுகிறது. சுனிலுக்கு வேறு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
காங்கிரஸ் கட்சி
காங்கிரஸ் கட்சி இப்போது நல்ல வாக்கு வங்கியை கொண்டு இருக்கிறது. ஆனாலும் திமுக கூட்டணியை நம்பி இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சியை கீழ்மட்ட அளவில் வலிமையாக்க வேண்டும். இதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும் என்று சுனிலை காங்கிரஸ் அணுகி உள்ளதாக கூறப்படுகிறது. இப்போதைக்கு அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிந்துவிட்டன. விரைவில் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவார் என்று கட்சிக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்துள்ளன.