Exclusive: திருமாவளவன் பிரதமர் ஆவார்.. எங்க குறி செங்கோட்டை தான்.. விசிக சங்கத்தமிழன் ஒரே போடு!
சென்னை: துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்பட இருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், பாஜகவின் தமிழிசை, திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் எனக் கூறினார். இந்நிலையில், திருமாவளவன் பிரதமர் ஆவார் என ஒரே போடாகப் போட்டுள்ளார் விசிக மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன்.
நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார் விசிக மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன். திமுக உடனான கூட்டணி, விசிகவின் எதிர்கால திட்டம் குறித்த அவரது பேட்டி இங்கே..

கேள்வி: பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்கவில்லை என்பதைக் கண்டித்து திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக தனித்தனியாக போராட்டம் நடத்துகின்றனர்.. திமுக கூட்டணியில் விரிசலா?
சங்கத்தமிழன்: அவரவருக்கு கட்சி இருக்கிறது, கொள்கை இருக்கிறது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக என எங்களுக்கு தனித்தனி கொள்கை கோட்பாடு இருக்கிறது. நாங்கள் எல்லோரும் எல்லா விஷயத்திலும் ஒரே கருத்தில் இருப்போம் எனச் சொல்ல முடியாது. ஆனால், சமூக நீதி என்ற ஒரு கொள்கையில் ஒற்றுமையாக இருக்கிறோம். பல விஷயங்களில் முரண்கள் இருக்கிறது.
திமுக மீது வருத்தம் உள்ளது: சாதிய வன்கொடுமை விவகாரத்தில் திமுக நன்றாகச் செயல்படவில்லை என வெளிப்படையாகவே சொல்வோம். எங்களுக்கு மன உளைச்சல் இருக்கிறது. வேங்கைவயல் குற்றவாளிகளை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. ஆணவப் படுகொலை தடுப்பதற்கு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். ஆணவப் படுகொலைகளை ஒழிப்பதில் திமுக முறையாகச் செயல்படவில்லை எனக் குற்றம்சாட்டுகிறேன்.
தலித் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்ற சூழல் இருக்கிறது. இவை எல்லாமே பகை முரண்கள் அல்ல, நட்பு முரண்கள் தான். எங்களுக்கு எதிரி மதவாத பாஜக, சாதியவாத பாமக. அவர்களை எதிர்ப்பதில் நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். ஆனால், கொள்கை கோட்பாடுகளில் தனித்தனியாக போராடுகிறோம், தேர்தல் வரும்போது சேர்ந்துகொள்வோம்.
கேள்வி: காங்கிரஸ் கட்சியில் திமுக உடனான கூட்டணி தொடர்பாக சலசலப்பு இருந்து வருகிறது. துணை முதல்வர் தொடர்பான விவாதம் எழுந்த போது, சமூக நீதி பேசும் திமுக, துணை முதலமைச்சர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என தமிழிசை சௌந்தரராஜன் சொல்கிறார்.. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
சங்கத்தமிழன்: இன்று விசிக அங்கீகாரம் பெற்ற கட்சி. 4 எம்.எல்.ஏக்கள், 2 எம்.பிக்களை கொண்ட கட்சி. நாளை எங்கள் தலைவர் ஏன் அமைச்சராகவோ, துணை முதல்வராகவோ, முதலமைச்சராகவோ, பிரதமராகவோ ஆகக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கும் இருக்கிறது. எத்தனை காலம்தான் கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொண்டு நிற்பது? அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இருக்காதா?
இவ்வளவு விவரமாகப் பேசும் தமிழிசை சௌந்தரராஜன், துணை பிரதமராக ஒரு தலித் தலைவரை கொண்டு வர வேண்டும் எனக் கேட்கலாமே? அதை செய்வதற்கு தைரியம் இல்லை. திருமாவளவன் ஏன் நாளை முதலமைச்சர் ஆகக்கூடாது என்ற எண்ணம் எங்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களிடமும் உள்ளது. அது ஒருநாள் நடக்கும்.
திருமா பிரதமர் ஆவார்: எங்கள் இலக்கு செங்கோட்டை. செயிண்ட் ஜார்ஜ் கோட்டை அல்ல. இங்கே சாதியவாதிகள் நிறைய இருக்கிறார்கள். இங்கு முட்டி மோதுவதற்குப் பதிலாக ஸ்ட்ரெய்ட்டாக பிரதமர் ஆகிவிடலாம். அங்கிருந்து இங்கே எளிதாக கண்ட்ரோல் செய்துவிடலாம். அம்பேத்கருக்கு பிறகு ஒரு தலைவர் வந்துவிட்டார் என்ற இமேஜ் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மத்திய பிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மாநில மக்கள் மத்தியில் ஏற்பட்டுவிட்டது.
இப்போதே பாஜக மைனாரிட்டி அரசு தான். வரும் காலத்தில் இன்னும் பாஜக நிலைமை மோசமாகும். அன்றைக்கு, தன்னந்தனியாக யாரும் ஜெயிக்கவே முடியாது. அப்போது முக்கியமான தலைவராக திருமாவளவன் இருப்பார். நேர்மையானவராக, கல்யாணம் பண்ணாமல் இருக்கிறார், இவரை பிரதமர் ஆக்குவோம் என அனைவரும் சேர்ந்து முடிவு எடுக்கவும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு கூறியுள்ளார் சங்கத்தமிழன்.












Click it and Unblock the Notifications