"யாரும் பேசக்கூடாது".. சொன்ன கொஞ்ச நேரத்திலேயே இப்படி சல்லி சல்லியா உடைச்சுட்டாங்களே!
அதிமுக தலைமையின் கட்டுப்பாட்டை மீறி ஊடகங்களுக்கு பேட்டி தரப்பட்டது
Recommended Video
சென்னை: "இதுவே ஜெயலலிதா இருந்திருந்தால், இப்படியெல்லாம் நடக்குமா?" இப்ப அதிமுகவில் நடக்கும் எல்லா விஷயங்களுக்கும் இந்த வரிகளைதான் நமக்கு திரும்ப திரும்ப சொல்ல வேண்டியதா இருக்கு!
ஜெ. இறந்ததில் இருந்தே அதிமுக ஒரு கட்டுக்கோப்பில் இல்லாமல் போய்விட்டது.. யார் யாரிடம் பணிந்து கட்டுப்பட்டு நடக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை. இந்த 3 வருடமாக அவ்வப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகளின் பேச்சு, பேட்டிகளை வைத்து நாம் யூகித்து வந்தாலும், தேர்தலுக்கு பிறகு இது அப்பட்டமாக கட்சியில் காணப்படுகிறது.
இதற்கு பிள்ளையார் சுழி போட்டதே ராஜன் செல்லப்பாதான். ஜெயலலிதா இருந்திருந்தால், எந்த நிர்வாகியும் தலைமை குறித்து பகிரங்கமாக பேட்டி அளித்திருக்க மாட்டார்கள். அந்த துணிச்சலும் அப்போது யாருக்கும் இருந்ததில்லை.
கூடையும், கையுமாக பீச்சுக்கு வந்த நடிகை விந்தியா.. ஏன்.. எதற்கு?
ராஜன் செல்லப்பா
ஒற்றை தலைமை வேண்டும் என்று எப்போது ராஜன் செல்லப்பா சொன்னாரோ, அப்போதே அவரை கட்சி தலைமை கண்டிக்க தவறிவிட்டது. இது ஏன் என்பது இதுவரை மர்மமாக உள்ளது. அதற்கு பிறகும், ராஜன் செல்லப்பாவுக்கு வாய்ப்பூட்டு போடாமல், மாறாக, யாரும் அவரது பேட்டி பற்றி கருத்து சொல்லக்கூடாது என்று நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போட்டது தலைமை.
திருப்பரங்குன்றம்
ஆனால் இதையும் மீறி ராஜன் செல்லப்பா திருப்பரங்குன்றத்தில் மீட்டிங் போட்டார். அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தலைமையின் உத்தரவையும் மீறி நடந்த கூட்டம் குறித்தோ, பங்கேற்றவர்கள் குறித்தோ, எந்தவித மறுப்பும், கருத்தும், கண்டனமும் இதுவரை வெளிவரவில்லை.
உத்தரவு
இதுபோலவே நேற்றும் நடந்தது. அதிமுக மா.செ. கூட்டத்தில், 4 பேர் தவிர வேறு யாருக்குமே பேச அனுமதி மறுக்கப்பட்டது. அதனால் ஒற்றை தலைமை குறித்து பேசப்படவில்லை. மேலும் ஊடகங்களுக்கு யாரும் பேட்டி தரக்கூடாது, என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஒற்றை தலைமை
ஆனால், வெளியே வந்ததும் முதல்வேலையாக அந்த உத்தரவைதான் உடைத்தெறிந்தனர். இதை முதலில் உடைத்தது ஜெயக்குமார்தான். செய்தியாளர்களிடம் பேசியபோது, "கட்சிக்கும், ஆட்சிக்கும் ஒருபிரச்சனையும் இல்லை. ஒற்றை தலைமை கோரிக்கை இனி எழ வாய்ப்பில்லை" என்று சொல்லிவிட்டு போனார். பிறகு கட்சியின் மூத்த தலையான வைத்திலிங்கம், "இரட்டை தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. பொதுச்செயலர் என்ற பேச்சுக்கே இடமில்லை" என்று சொல்லிவிட்டு போனார்.
ராஜேந்திர பாலாஜி
அடுத்ததாக, ராஜேந்திர பாலாஜி, "சிரித்து கொண்டே உள்ளே போனோம், சிரித்து கொண்டே வெளியே வந்தோம்" என்று சம்பந்தமே இல்லாமல் ஒரு விஷயத்தை சொல்லிவிட்டு போனார். அரசியல் களம் இந்த அளவுக்கு இப்போது ஆடிப்போக மூலக்காரணமாக இருந்த ராஜன் செல்லப்பாவோ, "ஒற்றை தலைமை தேவை என்ற முதல் கல்லை எறிந்துள்ளேன். இனி நடப்பதை பாருங்கள்" என்று பொடி வைத்து பேசிவிட்டு போனார்.
எம்எல்ஏ பிரபு
இவர்கள் எல்லாம் போதாதென்று, அறந்தாங்கி எம்எல்ஏ இரத்தின சபாபதியோ, இருக்கும் மனக்குமுறலை எல்லாம் கொட்டி வைத்துவிட்டு போனார். அதிருப்தி எம்எல்ஏ பிரபுவோ "அதிமுகவுக்கு ஆளுமை மிகக் தலைமைதான் தற்போதைய தேவை" என்றார்.
குழப்பம்
ஆக மொத்தம்.. எதை பத்தி பேசக்கூடாது என்று தலைமை சொன்னதோ, அதுதான் உடைத்தெறியப்பட்டுள்ளது. இதை எல்லாம் பார்த்தால், உத்தரவு பிறப்பித்த தலைமையை இவர்கள் ஏற்கிறார்களா, மறுக்கிறார்களா என்றே தெரியமாட்டேங்குதே!