அமாவாசைக்கு பிறகு வரும் 3ஆவது முகூர்த்த நாள்! பத்திரப் பதிவு அலுவலகங்களில் இன்று கூடுதல் டோக்கன்
சென்னை: முகூர்த்த தினமான இன்று பத்திரப்பதிவுக்கான டோக்கன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சார் பதிவாளர் அலுவலகங்களில் பதிவுக்கான பத்திரங்கள் தயாரிக்கப்பட்டதும் ஆன்லைன் முறையில் உட்செலுத்த வேண்டும். இதில் ஆரம்ப கட்ட சரிபார்ப்பு பணிகள் முடிந்த நிலையில் பதிவுக்கான நேரம் பயனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.

அந்த நேரத்துடன் வரிசை எண் அடங்கிய டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான சார் பதிவாளர் அலுவலகங்களில் தினசரி 100 டோக்கன்களும் அதிக பத்திரங்கள் பதிவாகும் இடங்களில் 200 டோக்கன்களும் வழங்கப்படுகின்றன.
முகூர்த்த நாட்களில் மக்கள் அதிக எண்ணிக்கை பத்திரப் பதிவுக்கு வருகை தருவர் என்பது காலம் காலமாக நடக்கும் ஒரு விஷயமாகும். இதை கருத்தில் கொண்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த நாட்களில் கூடுதலாக டோக்கன் விநியோகம் செய்யப்படும். அந்த வகையில் இன்று முகூர்த்த தினம் என்பதால் கூடுதலாக டோக்கன்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு சார் பதிவாளர் இருக்கும் அலுவலகங்களில் 100 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இரு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்களை விநியோகம் செய்ய வேண்டும். அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அது போல் 12 தட்கல் முன் பதிவு டோக்கன்களுக்கு கூடுதலாக 4 டோக்கன்களும் வழங்கப்படும். இதற்கான உத்தரவை பதிவுத் துறை செயலாளர் ஜோதி நிர்மலா சாமி பிறப்பித்துள்ளார்.
கடந்த முறை ஆடி 18 இன் போதும் டோக்கன்கள் அதிக அளவு வழங்கப்பட்டது. அன்று செய்யும் காரியங்கள் பெருகும் என்பதால் மக்கள் இது போன்று ஒரு நல்ல நாட்களில் புது விஷயங்களை செய்து வருகிறார்கள். அது போல் ஆவணி மாதத்திலும் முகூர்த்த தினத்தில் கூடுதல் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன. அது போல் இந்த கார்த்திகை மாதத்தில் இன்று 2 ஆவது முகூர்த்த நாள், அமாவாசைக்கு பிறகு 3 ஆவது முகூர்த்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications