"ஸ்பாட்ல" நின்னே சொல்லிட்டாரே விஜய் வசந்த்.. அதுவும் வீடியோ போட்டு.. ஒரே சந்தோஷம் .. கவனிக்கும் பாஜக
விஜய் வசந்த் எம்பி வீடியோ வெளியிட்டு ராகுல் காந்தி யாத்திரை குறித்து பெருமிதம் தெரிவித்துள்ளார்
சென்னை: ராகுல்காந்தியின் யாத்திரை வெற்றிகரமாக முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியே பூரித்து போயுள்ளது.. அந்தவகையில், எம்பி விஜய் வசந்த், லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது, அனைவரின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
விரைவில் எம்பி தேர்தல் வரவுள்ள நிலையில், தேசிய கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.. அந்தவகையில், காங்கிரசும் களத்தில் குதித்துள்ளது. அதன் முதல்கட்டமாக, ராகுல் காந்தி, யாத்திரையை கையில் எடுத்து, அதை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்..
அதைவிட முக்கியம், அந்த யாத்திரையை ராகுல்காந்தி, நம் தமிழகத்தில் இருந்து அன்று துவக்கியதுதான்.. பொதுவாக, இதுபோன்ற யாத்திரைகள் மூலமாகத்தான், மக்களுடன் நேரடியாக நெருங்கி சந்திப்பதால், இதனால் ஏற்படக்கூடிய தாக்கங்களும், அதிர்வுகளும் அதிகமாகும்..
இந்திய ஒற்றுமை யாத்திரை வெற்றியை தடுக்க நினைத்தார்கள்..'சகோதரர்' ராகுல் காந்திக்கு ஸ்டாலின் வாழ்த்து
சான்ஸே இல்லை
அந்தவகையில், ராகுல் மேற்கொண்ட யாத்திரை, காங்கிரசுக்கு வலு சேர்த்துள்ளது என்றே சொல்லலாம்.. ராகுல்காந்தியை பொறுத்தவரை வரும் எம்பி தேர்தலுக்கு தமிழகத்தை குறி வைத்து வருவதாக சொல்லப்பட்டு வருகிறது.. இதை மனதில் வைத்துதான், "தமிழ்நாட்டை தன் வாழ்நாளில் பாஜக ஆளவே முடியாது" என்ற வார்த்தையை, ராகுல் அன்று மக்களவையில் துணிந்து சொன்னார் என்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, ராகுல் எந்த தொகுதியில் போட்டியிட போகிறார் என்ற விஷயம்கூட கடந்த வருடமே கசிந்தது..
சென்டிமெண்ட்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை செண்டிமெண்ட்டாக ஸ்டாலினிடம் கேட்க ஒரு யோசனை உள்ளதாம்.. ஒருவேளை ஸ்ரீபெரும்புதூரை ராகுல் கேட்டாலும், அதற்கு ஸ்டாலினும் எவ்வித மறுப்பும் சொல்ல போவதில்லை என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதுமட்டுமல்ல, தமிழகத்தில் போட்டியிடுவது, தென் மாநிலங்களில் அதிக இடங்களில் வெல்ல உதவும் என்று ராகுல் நினைப்பதாகவும், அதற்கான முன் தயாரிப்பாகவே, தமிழகம், தமிழ் மொழி பற்றிய ராகுலின் பேச்சுக்கள் அமைந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது... இதுஒருபுறம் இருந்தாலும், ராகுலின் யாத்திரை தற்போது சிறப்பாக முடிவடைந்துள்ளது..
பூரிக்கும் கதர்கள்
கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கிய யாத்திரை, அங்கிருந்து கேரளா, கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா. மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், வழியாக 4,080 கிமீ பயணித்து 12 மாநிலங்களை கடந்து ஜம்மு காஷ்மீரில் நிறைவடைந்தது.. இந்த யாத்திரை முழுவதும் ராகுல் காந்தி, 12 பொதுக்கூட்டங்கள், 100க்கும் அதிகமான தெருமுனைக் கூட்டங்கள், 13 பத்திரிகையாளர்கள் சந்திப்பு, 275க்கும் அதிகமான திட்டமிடப்பட்ட நடைபயண உரையாடல்கள், 100 க்கும் அதிகமான தனிஉரையாடல்கள் ஆகியவற்றில் பங்கேற்றுள்ளதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது..
லைவ் வீடியோ
ஸ்ரீநகரில் யாத்திரையை நிறைவு செய்த ராகுல்காந்தி, அங்குள்ள கட்சி அலுவலகத்தில் பேசும்போது, "யாத்திரையில் 136 நாட்களாக நீங்கள் அளித்துவந்த ஆதரவு, அன்பு, பிரியத்திற்கு நன்றி" என்று உணர்ச்சி பெருக்குடன் கூறினார். இந்நிலையில், யாத்திரையின் இந்த நிறைவு விழாவில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்துகொண்டார்.. அங்கிருந்தபடி பேசிய வீடியோவை, சோஷியல் மீடியாவில் ஷேர் செய்து அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.. "தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்ற #இந்தியஒற்றுமைபயணம் கன்னியாகுமரியில் ஆரம்பித்து இன்று காஷ்மீரில் இனிதே நிறைவடைந்தது.
பாக்கியம்
இந்த யாத்திரை தொடங்கிய போது கன்னியாகுமரியிலும், நிறைவடைந்த போது காஷ்மீரிலும் பங்கு பெற முடிந்ததை பாக்கியமாக கருதுகிறேன். மிக பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. தலைவரின் இந்த யாத்திரையின் குறிக்கோள் நிறைவேற நாம் ஒன்றிணைந்து பாடுபடுவோம். இதற்காக உழைத்த எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி" என விஜய் வசந்த் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இதுபோலவே, காங்கிரஸ் நிர்வாகிகள், ராகுலின் யாத்திரை குறித்து பெருமிதம் தெரிவித்து வருகிறார்கள்.. இதை மேலிட பாஜகவும் உற்று கவனித்து வருகிறது..!!