உழவர் சந்தையில் இருந்து ஆன்லைன் டெலிவரி.. வேளாண் பட்ஜெட்டில் வந்த தரமான அறிவிப்பு!
சென்னை: உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு டெலிவரி செய்யும் வகையில் உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், 5 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கவும் வழிவகை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2025-26ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனையொட்டி திமுக எம்எல்ஏ-க்கள் பச்சைத்துண்டு அணிந்து சட்டப்பேரவைக்கு வந்தனர். இதன்பின் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

அப்போது எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உரையில், விவசாயத்துடன் உழவர்களின் நலனை மையப்படுத்தி வேளாண் பட்ஜெட் 2025 தயாரிக்கப்பட்டுள்ளது. உழவர்களின் வாழ்வில் இந்த பட்ஜெட் வளர்ச்சியை கூட்டும் என்று நம்புகிறேன். இந்த நிதியாண்டில் வேளாண் துறைக்கு மொத்தமாக ரூ.45,661 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் தற்போது வரை ரூ.10,346 கோடி தொகையும், வட்டித் தொகையும் தமிழக அரசால் விடுவிக்கப்பட்டுள்ளன. 20256-26ல் ரூ.1,427 கோடி தள்ளுபடி செய்வதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நெல் கொள்முதல் மூலமாக ரூ.297 கோடி நேரடியாக விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 50 உழவர் சந்தைகள் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 கோடியில் அடிப்படை கட்டமைப்பு மேம்படுத்தப்படும். வட்டாரங்கள் தோறும் தேர்வு செய்யப்பட்ட மையங்களில் வேளாண் விளை பொருட்கள் விற்பனை செய்யப்படும். அதேபோல் உழவர் சந்தை காய்கறிகளை நுகர்வோர் வீடுகளுக்கு எடுத்து சென்று டெலிவரி செய்ய உள்ளூர் இணைய வர்த்தகத்துடன் இணைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் நல்லூர் வரகு, வேதாரண்யம் முல்லை, நத்தம் புளி, ஆயக்குடி கொய்யா, கப்பல்பட்டி கரும்பு முருங்கை ஆகிய 5 விளை பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்க வழிவகை செய்யப்படும். அதற்காக ரூ.15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே ஊபர் ஈட்ஸ் உள்ளிட்ட சில செயலிகள் மூலமாக உழவர் சந்தை பொருட்கள் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்பட்டு வருகின்றன. பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன் உள்ளிட்டவை கூட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களிலும் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படப்பட்டால், அது உழவர்களுக்கும், வியாபாரிகளுக்கு கூடுதம் நன்மை பயக்கும் என்று பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications