சாதாரண விவசாயி மகன் இன்று இஸ்ரோவின் ராக்கெட் மனிதன்.. நம்ப முடியாத அதிசயம் 'சிவனின்' பயணம்
Recommended Video
சென்னை: சந்திரயான் 2 விண்கலம் 95 சதவீதம் வெற்றி பெற்ற நிலையில் இன்று உலகமே இஸ்ரோ தலைவர் சிவனை கொண்டாடுகிறது. சாதாரண விவசாயியின் மகன் அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து உலகின் மிக முக்கியமான விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோவிற்கு தலைவராக உயர்ந்துள்ளார்.
சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு கடந்த ஜூலை 22ம் தேதி விண்ணில் ஏவியது. இந்த விண்கலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணித்து வெற்றிகரமாக நிலவை நெருங்கியது.
இந்நிலையில் கடைசி 2.1 கிலோமீட்டர் தூரம் இருக்கும் போது இன்று அதிகாலை தகவல் தொடர்பில் துண்டிப்பு ஏற்பட்டது. வெற்றியின் எல்லையை தொட்ட விஞ்ஞானிகள் திடீரென ஏற்பட்ட கோளாறால் உடைந்து போயினர். இதனால் உடைந்து கண்ணீர்விட்ட இஸ்ரோ தலைவர் சிவனுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்தார்.
இஸ்ரோ மையத்தில் சட்டென மாணவர் கேட்ட சுவாரசிய கேள்வி.. பிரதமராகலாமே.. சிரித்தபடி பதில் சொன்ன மோடி
அதிசயம் 'சிவனின்' பயணம்
இந்நிலையில் பிரதமர் வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவனின் வாழ்க்கை அவ்வளவு சாதாரணமான பயணம் அல்ல. மிகமிக கடினமான அதிசயமான பயணம் ஆகும். வறுமையை மட்டுமே கண்ட சாதாரண விவசாயியின் மகனாக தமிழகத்தில் பிறந்து இன்று உலகின் முக்கிய விண்வெளி ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இஸ்ரோவின் தலைவராகவும், உலகம் போற்றும் சந்திரயான் 2 திட்டத்தின் தலைவராகவும் உயர்ந்துள்ளார். இவரது வாழ்க்கை இளம் மாணவர்களுக்கு ஒரு உந்து சக்தியாகும்.
தமிழ் வழி கல்வி
சிவன் கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளை கிராமத்தில் ஒரு சாதாரண விவசாயியின் மகனாக பிறந்தார். தமிழகத்தில் அரசு பள்ளியில் தமிழ் மீடியத்தில் தான் படித்தார். கல்லூரி படிப்பை (பிஎஸ்சி கணிதம் ) நாகர்கோவிலில் உள்ள எஸ்டி இந்து கல்லூரியில் முடித்தார். அதன்பிறகு ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படிப்பை எம்ஐடியில் 1982ம் ஆண்டு முடித்தார். 2006ம் ஆண்டு மும்பை ஐஐடியில் விண்வெளி பொறியியல் படிப்பில் பிஎச்டி பட்டம் பெற்றார்.
வறுமையால் யாரும் படிக்கவில்லை
சிவன் தான் அவரது குடும்பத்தில் முதல் பட்டதாரி. இவரது இரண்டு சகோதரிகளும் வறுமையின் காரணமாக உயர் கல்வியை படிக்கவில்லை. இவர் சிறுவயதில் தனது தந்தைக்கு உதவியாக விவசாயம் செய்து வந்துள்ளார். அதன் காரணமாகவே கல்லூரி படிப்பை தனது கிராமத்துக்கு அருகிலேயே படித்துள்ளார்..
எம்ஐடியில் தான் பேண்ட்
இவர் பிஎஸ்சி கணிதத்தை 100 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்ற பிறகு சிவனுக்கு மாற்றங்கள் நடந்துள்ளது. இவர் சிறுவயதில் செருப்போ, ஷுவோ அணிந்தது இல்லையாம். இவர் கல்லூரியில் படிக்கும் வரை வேஷ்டி தான் அணிந்துள்ளார். இவர் முதன்முதலில் பேண்ட் போட்டது எம்ஐடியில் படிக்க நுழைந்த போது தானாம்.
கடும் உழைப்பு
1982ம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த சிவன் கிட்டத்தட்ட அனைத்து செயற்கைகோள் திட்டங்களில் பணியாற்றி உள்ளார். இவர் 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்கும் முன்பு விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வு நிறுவன இயக்குனராக பணியாற்றினார். இவரை இஸ்ரோ விஞ்ஞானிகள் ராக்கெட் மனிதன் என அழைக்கிறார்கள். இவர் தலைமையில் தான் கிரையாஜினிங் என்ஜினுடன் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஆர்எல்வி ராக்கெட்டுகளை இந்தியா விண்ணில் செலுத்தியது. ஒரே நேரத்தில் 104 ராக்கெட்டுகளை கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி இந்தியா ஏவியது சிவனின் தலைமையில் தான்.
தமிழ் பாடல்களை விரும்புவார்
சிவனுக்கு தமிழ் சினிமாவில் பழைய பாடல்கள் மிகவும் பிடிக்குமாம். இவருக்கு பிடித்த படம் ராஜேஷ் கண்ணா நடித்த ஆராதனா படமாம். இவரது திருவனந்தபுரம் வீடு மற்றும் பெங்களூரு வீடு ரோஜாக்கள் நிறைந்து காணப்படுகிறது. அவரது வீட்டில் உள்ள ரோஜாக்களை போல் தான் அவரும், கடின உழைப்பு என்று முட்களை தாங்கி பலரும் சூட்டும் கிரீடமாக மாலையாக சிவன் உயர்ந்து நிற்கிறார்.