பயிர் கடன் ரூ.3 லட்சம்.. ஆனால் தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? விஜய் அறிவிப்பால் விவசாயிகள் ஏமாற்றம்
சென்னை: விவசாய பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருக்கிறார். ஆனால், இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக இருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்திருக்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, வேளாண் பயிர்க்கடன் தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. முதலமைச்சர் விஜய் வெளியிட்டிருக்கும் அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதிருப்தியை பெற்றிருக்கிறது.

முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் இன்று கூட்டுறவு வங்கிகளில் குறு மற்றும் சிறு விவசாயிகளுக்கான பயிர்க்கடன்களை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின்படி, குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலும், சிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலும் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
இந்தக் கடன் தள்ளுபடி மே 01, 2025 முதல் பிப்ரவரி 28, 2026 வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்ட கடன்களுக்குப் பொருந்தும். இதன் மூலம் சுமார் 14,22,555 விவசாயிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தால் தமிழக அரசுக்கு ₹2,044.46 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள விவரங்களின்படி: ரூ. 50,000 வரை கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுத் தள்ளுபடி வழங்கப்படும். சிறு விவசாயிகளுக்கு 50% அதாவது ரூ. 25,000 வரை தள்ளுபடி கிடைக்கும்.
ரூ. 50,001 முதல் ரூ. 60,000 வரையிலான கடன்களுக்கு: குறு விவசாயிகளுக்கு ரூ. 40,000; சிறு விவசாயிகளுக்கு ரூ. 20,000 தள்ளுபடி. ரூ. 60,001 முதல் ரூ. 70,000 வரையிலான கடன்களுக்கு: குறு விவசாயிகளுக்கு ரூ. 30,000; சிறு விவசாயிகளுக்கு ரூ. 15,000 தள்ளுபடி வழங்கப்படும்.
ரூ. 70,001 முதல் ரூ. 80,000 வரையிலான கடன்களுக்கு: குறு விவசாயிகளுக்கு ரூ. 20,000; சிறு விவசாயிகளுக்கு ரூ. 10,000 தள்ளுபடி.
ரூ. 80,001 முதல் ரூ. 90,000 வரையிலான கடன்களுக்கு: குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000; சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி வழங்கப்படும்.
ரூ. 90,001 முதல் ரூ. 1,00,000 வரையிலான கடன்களுக்கு: குறு விவசாயிகளுக்கு ரூ. 10,000; சிறு விவசாயிகளுக்கு ரூ. 5,000 தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு, குறு மற்றும் சிறு விவசாயிகள் இருவருக்கும் தலா ரூ. 5,000 கடன் தள்ளுபடி கிடைக்கும்.
கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் பெற்ற மற்ற பெரிய விவசாயிகளுக்கும் தலா ரூ. 5,000 பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். இந்தத் திட்டம், எதிர்வரும் சாகுபடி பருவத்திற்குப் புதிய கடன்கள் பெற விரும்பும் விவசாயிகளுக்குப் பெரிய உதவியாக இருக்கும் என அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
விவசாயிகள் அதிருப்தி
ஆனால், இந்த கடன் தள்ளுபடி ஏமாற்றத்தை கொடுத்திருப்பதாக காவிரி டெல்டா பாசன விவசாய சங்க கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. கடன் ரூ.3 லட்சம் என்று இருக்கையில், தள்ளுபடி வெறும் ரூ.50 ஆயிரமா? என்று கூட்டமைப்பு கேள்வி எழுப்பியிருக்கிறது. 5 ஏக்கர் வரை உள்ள கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று தவெக வாக்குறுதி கொடுத்திருந்தது. ஆனால், இப்போது வந்தது முழு கடன் தள்ளுபடி இல்லை என்றும், குறிப்பிட்ட அளவுதான் கடன் தள்ளுபடி என்றும் சொல்லுவது என்படி சரியாக இருக்கும்? என விவசாயிகள் கேள்வி எழுப்பியிருக்கிறார்கள்.
எனவே தவெக அறிவித்தபடி முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications