ஆகஸ்ட் மாதம் பிறந்தாச்சு.. மின் கட்டணம் முதல் ரேஷன் கார்டு வரை 7 விஷயங்களில் மேஜர் மாற்றம்
சென்னை: ஆகஸ்ட் மாதம் பிறந்துள்ள நிலையில், பாஸ்டேக், சிலிண்டர் விலை, கூகுள் மேப்ஸ் கட்டணங்கள், கிரெடிட் கார்டு விதிகள். மின் கட்டணம், ரேஷன் கார்டு, தமிழ் புதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களில் மாற்றங்கள் நடைபெற போகிறது. உங்கள் வீட்டு மின் கட்டணம் இந்த மாத பில் கட்டும் போது கூடுதலாக கட்ட வேண்டியதிருக்கும். 1000 ரூபாய் தமிழ் புதல்வன் திட்டம் மூலம் கிடைக்க போகிறது. ஹெச்டிஎப்சி கிரெடிட் கார்டு விதிகளும் மாறி உள்ளது.
1. கேஸ் சிலிண்டர் விலை: சிலிண்டர் விலையை பொறுத்தவரை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களால் தீர்மானிக்கப்படுகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் மாத அடிப்படையில் மாறுகிறது. வீட்டு கேஸ் சிலிண்டர் விலை ஏறும் போது அது கணிசமாக பொதுமக்களை பாதிக்கிறது. ஜூலை மாதம், 19 கிலோ வணிக சிலிண்டரின் விலையை அரசு கணிசமாக குறைத்தது. ஆனால் ஆகஸ்ட் மாதத்தில், எல்பிஜி சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1,809.50 ஆக இருந்த நிலையில், இன்று முதல் 7 ரூபாய் 50 காசுகள் உயர்ந்துள்ளது. இதன்படி சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் 1,817 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வீட்டு சிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை

2. HDFC வங்கி கிரெடிட் கார்டு விதிகள்: இன்று முதல், ஹெச்டிஎப்சி வங்கி, தனது வங்கியில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி பேடிஎம், கிரிட், மொபிவிக் மற்றும் Cheq போன்ற மூன்றாம் தரப்பு ஆப்களை பயன்படுத்தி கட்டணங்கள் செலுத்தும் வாடகைப் பரிவர்த்தனைகளுக்கு ரூ.3000 வரை 1% கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், எரிபொருள் பரிவர்த்தனைகளுக்கு ₹15,000க்குக் குறைவான தொகைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது. கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை தாமதமாகச் செலுத்துவதற்கான கட்டணங்கள் ₹100 முதல் ₹1,300 வரை இருக்கும்.
3. கூகுள் மேப்ஸ் கட்டணங்கள்: கூகுள் மேப்ஸ் இந்தியாவில் தனது சேவைக் கட்டணங்களை ஆகஸ்ட் 1ம் தேதியான இன்று முதல் மாற்றி உள்ளது. கூகுள் நிறுவனம் கட்டணங்களை 70% வரை குறைத்துள்ளது. மேலும் சாதாரண பயனாளிகள் கூடுதல் கட்டணங்களால் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று அறிவித்துள்ளது.
4. தமிழ் புதல்வன் திட்டம்: தமிழ் புதல்வன் திட்டம் மூலம் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை ஆகஸ்ட் 9ம் தேதி கிடைக்க போகிறது. இந்த உதவி தொகை 3.28 லட்சம் மாணவர்ளுக்கு கிடைக்கும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயில்பவராக இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசு அங்கீகரித்ததாக இருத்தல் வேண்டும் பிற மாநிலங்களில் IIT, NIT, IISER போன்ற கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களும் பயன் பெறலாம். தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பயன்பெறுவர். வருமான உச்ச வரம்பு உட்பட எந்தப் பாகுபாடும் கிடையாது. அரசு பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் என இரண்டு வழிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தில் பணம் கிடைக்கும்.
5 மின் கட்டணம்: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் மாத இறுதியில் கணக்கெடுப்பு நடத்தும் போது, மின் கட்டணம் புதிய விகிதத்தில் நீங்கள் செலுத்த வேண்டும். 50 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கூடுதலாக உங்கள் மின் கட்டணம் இருக்க வாய்ப்பு உள்ளது.
6. ரேஷன் கார்டு: தமிழ்நாடு முழுக்க புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. புதிதாக 2 லட்சம் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இந்த மாதத்தில் நடைபெறும். தேர்தல் காரணமாக புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி தொடங்கி உள்ளதால் பல்லாயிரம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு கிடைக்கும்.
7.பாஸ்டேக் விதிகள்: வாகனங்களுக்கான 'பாஸ்டேக்' தொடர்பான சில நடைமுறைகள் இன்று முதல் மாற்றப்பட்டுள்ளன. இதன்படி 5 ஆண்டுகள் பழமையான பாஸ்டேக்குகள் மாற்றப்பட வேண்டும். 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் எடுத்த பாஸ்டேக்குகள் கே.ஒய்.சி. விவரங்களுடன் அக்டோபர் 31ம் தேதிக்குள் புதுப்பிக்கப்பட வேண்டும். வாகனங்களின் பதிவு எண், சேசிஸ் எண் ஆகியவற்றை, பாஸ்டேக் உடன் இணைக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications