அப்பா தமிழர், அம்மா ஆப்பிரிக்கர்! ஜெயம் ரவி தோழி கெனீஷா பின்புலம் இதுதான்.. அது என்ன ஹீலிங் தெரபி?
சென்னை: நடிகர் ஜெயம் ரவி ஹீலிங் தெரபி பற்றிப் பேசி இருந்த நிலையில், பாடகி கெனீஷா தான் அளித்துவரும் ஹீலிங் தெரபி பற்றியும் அவரது குடும்ப பின்புலம் பற்றியும் மிக விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்.
சமூக ஊடகங்களை திறந்தால் ஜெயம் ரவியின் விவாகரத்து விஷயம்தான் அதிகம் அலசி ஆராயப்படுகிறது. ஆர்த்தியை விட்டு ரவி பிரிவதற்குப் பின்னால் பல குடும்பக் காரணங்கள் உள்ளது என ஒரு பக்கம் ரவி மறைமுகமாக விளக்கம் அளித்திருந்தாலும், அந்த முடிவுகள் அனைத்தும் தன்னை கலந்தாலோசிக்காமல் எடுக்கப்பட்ட முடிவுகள் என மறுத்துள்ளார் ஆர்த்தி. இந்த விவாகரத்து விசயத்தில் பாடகி கெனீஷா பெயரும் அடிபடுகிறது. அதைப் பற்றி செய்தியாளர்களிடம் பேசிய ரவி, 'என் சொந்த வாழ்க்கை பிரச்சினையில் வேறு நபர்களை தேவை இல்லாமல் சம்பந்தப்படுத்த வேண்டாம். கெனீஷா ஒரு சிறந்த பாடகி. அவருடன் வருங்காலத்தில் இணைந்து ஒரு ஹீலிங் செண்டர் தொடங்குவதே என் திட்டம்' எனக் கூறியிருக்கிறார்.

ஊடகங்கள் கெனீஷாவை மையமாக வைத்து பேசியபோது அவரை எனக்குத் தெரியாது என்றோ, அவருடன் எனக்கு ஒரு தொடர்பு இல்லை என்றோ ரவி மறுக்கவில்லை. இருவருக்கும் அறிமுகம் உள்ளது என்பதை ஏற்றுக் கொண்டுள்ளார். அவர் நினைத்தால் அவரை தெரியாது என மறுத்து இருக்க முடியும். வழக்கமாகப் பிரபலங்கள் சொல்வதைப் போல இவர் சொல்லவில்லை.
இந்நிலையில்தான் பாடகி கெனீஷாவின் 'இதை யார் சொல்வாரோ?' என்ற ஆல்பத்தை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார். அவர்தான் வெளியிடப் போகிறார் என்பதே எனக்குத் தெரியாது என்கிறார் கெனீஷா. முதலில் யார் இந்த கெனீஷா? இவரது பின்புலம் என்ன? ஜெயம் ரவி சொன்ன ஹீலிங் தெரபி என்றால் என்ன? அதைப் பற்றி எல்லாம் ஒரு தெளிவான விளக்கத்தை கெனீஷா அளித்துள்ள ஒரு பேட்டியில் விவரித்துள்ளார்.
கெனீஷா பேட்டியில், "ஒரு விதத்தில் நான் தமிழ் பெண் தான். அப்பா ஒரு தமிழர். அம்மா ஒரு ஆப்பிரிக்கர். நான் பிறந்து வளர்ந்தது முழுக்க கென்னாவில் தான். பிறகு பெங்களூருக்கு குடியேறினேன். பெற்றோர் இருவரும் பாடகர்கள். அம்மா எஸ்.பி.பியுடன் சேர்ந்து பாடி இருக்கிறார். என் குடும்பமே இசைக் குடும்பம். எனவே சர்ச்சில் சேர்ந்து பாடுவோம். இதுவே என் பாட்டுத் திறமைக்கு அடித்தளம் போட்டுக் கொடுத்தது. ஒருமுறை சர்ச்சில் பாடிக் கொண்டிருந்த போது ஒருவர் வந்து நான் நன்றாகப் பாடுவதாகச் சொன்னார். அப்போது இருந்து பாடுவதில் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
கூடவே லத்தின் நடனமும் ஆடக் கற்றுக் கொண்டேன். 8 வகையான லத்தின் நடனங்கள் இருக்கின்றன. அதை 4 வருடங்களாக முறைக்காகக் கற்றுப் பாடிக் கொண்டே நடனமாடினேன். நடனம்தான் எனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய இடம். நான் ஜிம் போவதில்லை. ஒர்க் அவுட் செய்யும் பழக்கம் இல்லை. நடனம்தான் என் உடற்பயிற்சி.
நான் பல நாடுகள் பயணம் செய்து இருக்கிறேன். வெளிநாடுகளில் புதியவர் ஒருவர் நம்மைச் சந்திக்கும்போது, 'ஹவ் ஆர் யூ?' என்று கேட்பார்கள். அது ஒரு சம்பிரதாயமான வார்த்தை. என்னைப் பொறுத்தவரை அது சம்பிரதாயமான வார்த்தை இல்லை. ஒருவரைப் பற்றி நலம் விசாரித்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்புவேன். அது எனக்குப் பிடிக்கும்.
நான் ஹீலிங் தெரபி. முறைப்படி அதற்காக உரிமம் பெற்றுள்ளேன். ஆரம்பத்தில் சைக்காலஜிதான் படித்தேன். உளவியல் என்பது மக்களைக் குணப்படுத்த போதுமானதாக இல்லை. அதை உணர்ந்த பின் ஹீலிங் தெரபி பக்கம் வந்தேன். இது ஆன்மீகத்துடன் தொடர்பு கொண்டது. எட்டு வகையான நிலை இதில் உள்ளது. அதை முறைப்படி கற்று இருக்கிறேன். இந்த நாட்டிலுள்ள கிராண்ட் மாஸ்டர்களில் நானும் ஒருவள்.
இதை வைத்து நான் பலருக்கும் சிகிச்சை அளித்து வருகிறேன். இது தவிர எனக்குச் சமைப்பது பிடிக்கும். சாப்பாட்டு விசயத்தில் என்னுடன் போட்டிப் போட்டு யாரும் ஜெயிக்க முடியாது. சென்னை பிரியாணிதான் என் விருப்பமான உணவு. விடுமுறை நாட்களில் ஆதரவற்றவர்கள் உள்ள இலங்கள் போய் நேரத்தைச் செலவிடுவேன். இதுதான் கெனீஷா" என்று ஒரு சுய விளக்கத்தை அளித்துள்ளார்.

"உளவியல் படித்துவிட்டு என்னிடம் சிகிச்சைக்கு வருபவர்களிடம் ஆலோசனை வழங்கி வந்தேன். அது எனக்கே மன நிறைவை அளிக்கவில்லை. என்ன அதில் விடுபடுகிறது எனப் பல ஆண்டுகள் தேடிப் பார்த்தேன். பின் அதில் ஒரு ஆன்மிக டச் இல்லை என உணர்ந்தேன். ரேக்கி, டேரோ, வாஸ்து, ஜோதிடம் என பல விசயங்களைக் கற்றேன். ஓம்காரா என்பது ஒரு வகை பயிற்சி. இது புத்திசத்திலிருந்து வந்தது.
மீண்டும் தீடாஹீலிங் கற்றேன். இதுவே 7ஆவது நிலை. இது ஒரு ஒளி நிலை. இதில் ஆண், பெண் பேதம் இல்லை. ஒளிதான் கான்செப்ட். இன்றைக்கு ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கிறார் என்று அது அன்றைக்கு ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகள் முன்பே மனதில் ஏற்பட்ட மாற்றம் அது. அதை உணர வருடங்கள் ஆகும். மன அழுத்தம் என சிகிச்சைக்குப் போனால், அது ஒன்றுமே இல்லை. ஜாலியாக இருங்கள். கவலையை விடுங்கள் என உளவியல் சிகிச்சை தருவார்கள். அதனால் பலன் இல்லை.
முதலில் நாம் எதற்காக அழுத்தம் அடைந்தோம் என்பது உணர வேண்டும். பின் அதனைப் புரிந்து கொள்ள வேண்டும். அதிலிருந்து வெளியேறு பற்றி யோசிக்க வேண்டும். பிறகுதான் மற்றவை எல்லாம். எடுத்த உடனேயே வெளியேறுவது பற்றி யோசிக்கக் கூடாது. அது பலன் தராது" என்கிறார்.
இவ்வளவு அறிவுரைகளைத் தரும் கெனீஷா சொந்த வாழ்க்கையில் ஏதேனும் துயரங்களைச் சந்தித்திருக்கிறாரா? அதைப் பற்றி விளக்கிய அவர், "இதுவரை என் ஒட்டுமொத்த வாழ்க்கையில் நான் புறக்கணிக்கப்பட்டிருக்கிறேன். நிறைய முறை கீழே விழுந்து எழுந்திருக்கிறேன். நிறைய மேடு பள்ளங்களைப் பார்த்திருக்கிறேன். என் கேரியரே இப்போதுதான் தொடங்கி இருக்கிறது. நாம் என்னதான் உழைத்தாலும் அதற்கு என்று ஒருநேரம் காலம் வரவேண்டும். ஒரு லக் தேவை. அது என் வாழ்க்கையில் இப்போதுதான் தொடங்கி உள்ளது" என்கிறார்.












Click it and Unblock the Notifications