பாலியல் தொழில்.. திடீர் திடீரென மாயமாகும் பெண்கள்.. பாலியல் அடிமைகளா? சர்வதேச கடத்தலா? என்ன நடக்கிறது
சென்னை: உலகம் முழுவதும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் சம்பவம் இன்றும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இதற்கான காரணம் என்ன? என்பது குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சம்பவம் ஒன்று நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஏறத்தாழ ஒரு வாரக் காலம் வரை செய்தி ஊடகங்களில் பேசுபொருளானது. அதாவது அம்மாநிலத்தில் குறிப்பிட்ட சில பகுதிகளில் பணத்திற்காக இளம்பெண்கள் ஏலம் விடப்படுகிறார்கள் என்பதுதான் அந்த செய்தி. அதாவது ஊர் மக்கள் சிலர் அதே ஊரை சேர்ந்த அல்லது பக்கத்து ஊரை சேர்ந்த பணக்காரர்களிடம் சிலர் கடன் வாங்குவார்கள்.
இந்த கடனை குறிப்பிட்ட காலத்திற்குள் முழுமையாக திருப்பி கொடுக்கப்பட வேண்டும் என்பது இருவருக்கும் இடையேயான ஒப்பந்தம். ஆனால் இங்கு எழுதப்படாத ஒரு ஒப்பந்தமும் இருக்கிறது. அதாவது கடன் வாங்கிய நபர் தனது கடனை திருப்பி கொடுக்க தவறினால் அதற்கு பதிலாக வீட்டில் உள்ள இளம் பெண்களை கடன் கொடுத்தவர்கள் தங்களுடன் அழைத்து செல்லலாம் என்பதுதான் அந்த ஒப்பந்தம். இப்படி அழைத்துச் செல்லப்படும் பெண்களை முதலில் கடன் கொடுத்த நபர்களாலும் அவரது நண்பர்களாலும் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவார்கள்.

ராஜஸ்தான் சம்பவம்
இதனையடுத்து ஒரு மாதம் கழித்து அங்கிருந்து அப்பெண் டெல்லி, மும்பை, கொல்கத்தா என பல்வேறு பெரு நகரங்களில் உள்ள தரகுகளிடம் விற்கப்படுவாள். இதுதொடர்பான செய்தி கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இப்படியெல்லாம் கூட எங்காவது நடக்குமா? என்கிற கேள்வி இருந்தது. இது இந்தியாவில் நடக்கும் சம்பவம். இதைவிட மோசமான சம்பவங்கள் பல உலகம் முழுவதும் நடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து சர்வதேச பெண்ணுரிமை செயற்பாட்டாளரான ஜூலி பிண்டெல் சில தகவல்களை விரிவாக எழுதியிருக்கிறார். அதாவது உலகம் முழுவதும் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு இருக்கும் வரை பெண்கள், சிறுமிகளின் கடத்தல் சம்பவங்கள் குறையவே குறையாது என்று கூறியுள்ளார்.

பெண்ணுரிமை செயற்பாட்டாளர்
இந்த தகவல்களை பிண்டெல், தனக்கு கிடைத்த தரவுகளை தொகுத்து வழங்கவில்லை. மாறாக இந்த பிரச்னையை அவர் நேராக பார்த்திருக்கிறார். 1998ம் ஆண்டு அல்பேனியாவில் இவர் பாலியல் கடத்தல் குற்றங்களை பார்த்திருக்கிறார். பாலியல் கடத்தல் என்றால், பாலியல் தேவைகளுக்காக பெண்கள், சிறுமிகள் கடத்தப்படுவது பாலியல் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. ஆக அல்பேனியாவில் அப்போது உள்நாட்டு போர் தீவிரமாக இருந்தது. எனவே எல்லா பக்கமும் வறுமை பரவியிருந்தது. இதனை பயன்படுத்திக்கொண்டு பெண்களுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பெண்கள் அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். இப்படி அழைத்து சென்றவர்கள் பாலியல் அடிமைகளாக ஆக்கப்பட்டனர். இப்படி எந்தெந்த வழிமுறைகளில் பெண்கள் கடத்தப்படுகிறார்கள் என்பது குறித்து பிண்டெல் ஆய்வு செய்து சில தரவுகளை வெளியிட்டுள்ளார்.

கடத்தல்
வெளிநாடுகளில் வேலை என்று ஆசை வார்த்தை கூறி அழைக்கும் போது பெண்கள் மறுத்தால் அவர்கள் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டிருக்கிறார்கள் என்று பிண்டெல் கூறுகிறார். 1998ல்தான் அப்படி இருந்தது என்றால் 2023ம் ஆண்டிலும் இது தொடர்கிறது என பிண்டெல் கவலை தெரிவித்திருக்கிறார். சரி இது பழைய கதை.. புதுக்கதை என்னவெனில், தற்போதும் நீடித்து வரும் 'பாலியல் தொழில்' காரணமாக ஏராளமான பெண்களும், சிறுமிகளும் பல்வேறு நாடுகளிலிருந்து வேறு நாடுகளுக்கு கடத்தப்படுகின்றனர். ஐ.நா சபை மற்றும் சில உலக நாடுகளின் காவல்துறையினர் இந்த பாலியல் கடத்தலை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். ஓரளவுக்குதான். ஆனால் இன்னும் 75%க்கும் அதிகமாக இந்த குற்றங்கள் நடந்துக்கொண்டேதான் இருக்கிறது.

காரணம்
ஒரு நாடுகளிலிருந்து மற்றொரு நாட்டிற்கு இப்படி பெண்களை கடத்துவது சட்டப்படி குற்றமாகும். மட்டுமல்லாது பாலியல் தேவைக்காக ஒரே நாட்டிற்குள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துவதும் பாலியல் கடத்தல் குற்றத்தில்தான் சேரும். என்றாலும், இதனை பாலியல் தொழில் நியாயப்படுத்துகிறது. ருமேனியா மற்றும் தாய்லாந்து நாடுகளில் இவ்வாறு கடத்தப்பட்ட பெண்கள் பலர் துன்பங்களை அனுபவித்து வந்தாலும், உள்ளூர் சட்டங்கள் இந்த சர்வதேச சட்டங்களை நீர்த்துப்போக செய்கிறது. ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலிலும் பாலியல் தொழில் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த தொழிலை செய்பவர்களை அதை செய்ய ஊக்குவிப்பவர்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அழைத்து சென்றால் அது சர்வதேச குற்றமாக கணக்கில் கொள்ளப்படாது. ஆக பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக ஊக்குவிப்பதுதான் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலுக்கு அடிப்படையான காரணம் என்று பிண்டெல் கூறியுள்ளார். தற்போது இவரது கூற்று சோஷியல் மீடியாக்களில் பலர் ஷேர் செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications