சென்னையில் ஆட்டத்தை தொடங்கும் மழை.. இந்த போட்டோ பாருங்க! வானிலை மையம் தந்த ‛வார்னிங்’
சென்னை: ஃபெங்கல் புயல் காரணமாக சென்னையில் மழை மேகங்கள் நுழைய தொடங்கி உள்ளன. இதனால் அடுத்த சில மணிநேரங்களில் சென்னை மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வெளுத்து வாங்கும் என்று போட்டோ வெளியிட்டு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஃபெங்கல் புயல் உருவானது.இந்த புயல் இன்று இரவு 9 மணி நிலவரப்படி நாகைக்கு கிழக்கே 240 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்திலும் நிலை கொண்டுள்ளது.
அதோடு இந்த புயல் 15 கிலோமீட்டர் வேகத்தில் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகலில் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரி அருகே கரையை கடக்க உள்ளது.

ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை உள்பட பல இடங்களில் கனமழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுவையில் ஒரு சில இடங்களில் கனம முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதிக கனமழையும் பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் சென்னையில் கனமழையை கொடுக்கும் வகையில் மழை மேகங்கள் சுத்துப்போட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நள்ளிரவு 11.48 மணிக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛மழை மேகங்கள் கடற்கரை பகுதிகளில் நுழைய தொடங்கி உள்ளன. அடுத்த சில மணிநேரங்களில் சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை முதல் கனமழை பெய்யும்'' என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை கடற்கரை பகுதியில் மழை மேகங்கள் திரண்டு இருக்கும் போட்டோவை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
அதேபோல் இன்றைய தினம் ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications