தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல்களைத் தொடர்ந்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு பிப்ரவரி 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்று பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

மொத்த வார்டுகள்
மொத்தம் 21 மாநகராட்சிகளில் 1,374 வார்டுகள், 138 நகராட்சிகளில் 3,843 வார்டுகள், 490 பேரூராட்சிகளில் 7,621 வார்டுகள் என 12, 838 வார்டுகளுக்கு இந்த தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும் பணி கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது.

மொத்த வேட்புமனுக்கள்
பிப்ரவரி 4-ந் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மாநகராட்சிகளில் 1,374 வார்டுகளுக்கு போட்டியிட 14, 701 பேரும், நகராட்சியில் உள்ள 3,843 வார்டுகளுக்குப் போட்டியிட 23,354 பேரும் பேரூராட்சிகளில் 7,621 வார்டுகளுக்கு 36,361 பேரும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட 74,416 பேர் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

இன்று இறுதி வேட்பாளர் பட்டியல்
இந்த வேட்புமனுக்களைப் பரிசீலனை செய்யும் பணி நேற்று முன்தினம் நடைபெற்றது. மேலும் இன்று மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை இறுதி கட்ட வேட்பாளர்கள் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட இருக்கிறது. இந்த பட்டியல் வெளியான பின்னர் வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் பணி நடைபெறும்.

களநிலவரம்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடதுசாரிகள், காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமைக் கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. அதிமுக அணியில் த.மா.க., புதியநீதி கட்சி, சமூக சமத்துவ படை ஆகியவை இணைந்துள்ளன. பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், விஜய் மக்கள் இயக்கம் உள்ளிட்டவை தனித்தும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தலுக்கான பிரசாரம் படுதீவிரமாக நடைபெற்றும் வருகிறது.












Click it and Unblock the Notifications