அதிமுக ஒற்றுமையாக போட்டியிட வாய்ப்பு.. இரட்டை இலையில் யார் நின்றாலும் ஆதரவு.. அழுத்தி சொன்ன ஓபிஎஸ்!
ஈரோட்டில் அதிமுக ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். அதேபோல் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றிபெற வைப்போம் என்றும், இடைக்கால பொதுச்செயலாளர் பதவியை தேர்தல் ஆணையமும், உச்சநீதிமன்றமும் அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி மற்றும் ஹிரிஷிகேஷ் ராய் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இதில் அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அதிமுக வேட்பாளரை பொதுக்குழுவே இறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். அதேபோல் இடைத்தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருப்பதால், வேட்பாளர் தேர்வு செய்வதை கடிதம் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தினர்.

வேட்பாளர் ஒப்புதல் படிவம்
இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியின் அதிமுக வேட்பாளராக தென்னரசை முன் மொழிந்து அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கு வேட்பாளர் ஒப்புதல் படிவம் அனுப்பும் பணிகள் தொடங்கியது. இதனை நாளை மாலை 7 மணிக்குள் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்ப அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் உத்தரவிட்டார்.

ஓபிஎஸ் அறிக்கை
இதனிடையே இன்று காலை முதல் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம், ஓபிஎஸ் அறிக்கையை வாசித்தார். அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒற்றுமையாக போட்டியிடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் நான் நீடிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பில் தடை விதிக்கப்படவில்லை. இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம்.

இரட்டை இலை சின்னம்
இரட்டை இலை சின்னம் முடங்க காரணமாக இருக்க மாட்டேன் என்றேன். தற்போது அதிமுக இரட்டை இலையில் போட்டியிட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னத்தில் நிற்கும் வேட்பாளரை ஆதரிப்போம். இடைக்கால பொதுச்செயலாளர் பொறுப்பை நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

படிவம் வந்துசேரவில்லை
இதனைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்திடம் தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படிவங்கள் அனுப்பப்பட்டு வருவதாக எழுப்பிய கேள்விக்கு, இதுவரை எங்களுக்கு விண்ணப்ப படிவம் வந்து சேரவில்லை. ஈரோடு கிழக்கு தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம்.

வேட்பாளர் தீர்மானிக்கப்படவில்லை
அதேபோல் பொதுக்குழு நியமிக்கும் வேட்பாளர் யார் என்பது தீர்மானிக்கப்படவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற பாடுபடுவோம். அதுமட்டுமல்லாமல் இது வெறும் இடைக்கால உத்தரவு தான். நாங்கள் ஜூலை 11ல் நடைபெற்ற பொதுக்குழு செல்லாது என்ற நிலைப்பாட்டில் தான் இருக்கிறோம் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications