எங்கிருந்தோ திடீரென புயலாகப் புறப்பட்டு புஷ்வானமாகி கடைசியில் போயஸ் பங்களாவையே கைப்பற்றிய ஜெ.தீபா
சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை இப்படி ஒருநபர் இருக்கிறார் என்பதே யாருக்கும் தெரியாமல் இருந்தது.. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக தொண்டர்களின் ஆகப் பெரும் நம்பிக்கைக்குரியவராக விஸ்வரூபமெடுத்து அதே வேகத்தில் அனுபவமின்மையால் அரசியல் களத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் போனவர்தான் ஜெ.தீபா. இப்போது சட்டப் போராட்டங்கள் மூலம் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட பங்களாவை தம் வசமாக்கி முதல் வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
Recommended Video
ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள்தான் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்குள் சசிகலாவும் அவரது மன்னார்குடி குடும்பமும் கோலோச்ச தொடங்கிய 1990களின் தொடக்கத்திலேயே அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர் ஜெ.தீபா.
ஜெயலலிதா உயிருடன் இருந்த போது போயஸ் கார்டன் பக்கமோ, அரசியல் பக்கமோ தலைகூட வைத்துப் படுக்காதவர்தான் இந்த தீபா. சசிகலாவின் ரத்த சொந்தமான சுதாகரனைத்தான் ஜெயலலிதா வளர்ப்பு மகன் என பிரகடனம் செய்தாரே தவிர சொந்த ரத்தமான தீபாவை கண்டுகொள்ளாதவராகவே வாழ்நாள் கடைசிவரைக்கும் இருந்தார் ஜெயலலிதா.

அரசியல் களத்தில் ஜெ.தீபா
ஜெயலலிதா மறைவுக்க்குப் பின்னர் சசிகலா தலைமையில் அதிமுக ஒன்று திரண்டது. சசிகலாவை ஏற்காதவர்கள் ஜெயலலிதாவைப் போல தோற்றம் கொண்ட அவரது அண்ணன் மகள் ஜெ.தீபாவை தலைவராக ஏற்றுக் கொண்ட அரசியல் விசித்திரம் ஒன்றும் தமிழகத்தில் நிகழ்ந்தது. ஜெ.தீபாவின் வீட்டு முன்பாக கட்டுக் கடங்காத வகையில் அதிமுக தொண்டர்கள் நாள்தோறும் அலை அலையாக திரண்டனர். ஒட்டுமொத்த தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அதிமுக தொண்டர்கள் ஜெ.தீபாவின் வீட்டை நோக்கி படையெடுத்தனர்.

சசிகலாவுடன் மல்லுக்கட்டு
அப்போது சசிகலாவா? தீபாவா? என்கிற ரேஞ்சுக்கு அரசியல் போட்டி இருந்தது. எம்.ஜி.ஆர் அம்மா தீபா என்கிற பேரவை எல்லாம் தொடங்கினார் ஜெ.தீபா. ஆனால் சசிகலா முதல்வர் நாற்காலிக்கு ஆசைப்பட, ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்க.. ஜெ. தீபா பக்கம் சாய்ந்த கூட்டம் அப்படியே ஓபிஎஸ் தலைமையை ஏற்றுக் கொண்டு சிட்டாகப் பறந்தது. காலவெள்ளத்தில் ஒரு கட்டத்தில் ஜெயலலிதாவின் சமாதியில் ஓபிஎஸ்ஸுடன் கை கோர்த்தும் பார்த்தார் ஜெ.தீபா. ஆனால் அவரது அரசியல் அனுபவமின்மை, அதிகாரத்தை உடனே சுவைக்க வேண்டும் என்ற பேராசை ஆகியவை ஏகப்பட்ட சர்ச்சைகளில் ஜெ.தீபாவை சிக்க வைத்தது. இதன் உச்சமாக கணவர் மாதவனே பிரிந்தும் போய் பின்னர் ஒன்று சேர்ந்தார். அப்போது கார் ஓட்டுநர் ராஜாவை முன்வைத்தும் சர்ச்சைகள் வெடித்தன.

ஓய்ந்தது ஜெ.தீபா எனும் புயல்
தீபாவின் கணவர் மாதவன் கூட ஒரு தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அந்த கட்சியின் நோக்கமே ஜெ.தீபாவை முதல்வராக்குவதுதான் எனவும் காமெடி செய்தார். ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்த கைகளான போது ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களா அரசுடைமையாக்கப்பட்டு நினைவில்லமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போதும் கூட அதிமுகவில் ஒட்டிக் கொள்ள ஏகத்துக்கும் முயற்சித்தார் ஜெ.தீபா. ஆனால் அதிமுகவின் இரட்டை தலைமை ஜெ.தீபாவை உள்ளேவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டது.இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு போனார் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் சட்டப்படியான ரத்த வாரிசுகள் நானே என கொடிபிடித்தார்... உருக்கமாக ஆடியோ வெளியிட்டார். இதன் உச்சமாக இன்னொன்றையும் செய்தார் ஜெ.தீபா. அதாவது தமது எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையை கலைத்த கையோடு அரசியலுக்கே குட் பை சொல்லி ஒதுங்கிவிட்டார். ஆம்... ஜெயலலிதா மறைவின் போது தொண்டர்கள் வெள்ளத்தால் நிரம்பிய வழிந்த தீபாவின் வீட்டு முன்பு ஆறுதலுக்கு கூட ஒரு அதிமுக தொண்டர் இல்லாமல் போனதால் வேறுவழியே இல்லாமல் அரசியலைவிட்வே விலகிப் போனார்.

ஜெ.பங்களா வசமாகிவிட்டது
ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை ஜெ.தீபா வசம் ஒப்படைக் சொன்ன உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் முதல் வெற்றியை பெற்றார். இன்று சென்னை மாவட்ட ஆட்சியரிடம் இருந்து ஜெயலலிதாவின் வேதா இல்லம் பங்களாவின் சாவியை வாங்கி தம் வசமாக்கிக் கொண்டார் ஜெ.தீபா. அரசியலில் மிகப் பெரும் தோல்வியைத் தழுவிய ஜெ.தீபா சட்டப் போராட்டத்தில் வென்று முதல் கட்டமாக போயஸ் கார்டன் பங்களாவை கைப்பற்றி இருக்கிறார்.. அடுத்தடுத்து ஜெ.வின் சொத்துகளுக்கு குறிவைப்பாரா? ஜெ. சொத்துகளை தம் வசமாக்கி வைத்திருக்கும் சசிகலா குடும்பம் என்ன செய்யும்? என்கிற அடுத்த பரபரப்புகள் விரைவில் அரங்கேறலாம்.












Click it and Unblock the Notifications