திருக்குறள் முதல் ஆண்டாள் திருப்பாவை வரை.. முதல்வரை நெகிழ்ச்சியடையச் செய்த தங்கம் தென்னரசு
சென்னை: சட்டசபையில் இன்று பட்ஜெட் உரை வாசித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, திருக்குறள் வாசித்ததில் தொடங்கி இறுதியாக ஆண்டாளின் திருப்பாவை வரிகள் சொன்னது வரை முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ச்சியடைய வைத்தார்.
தமிழக அரசின் பட்ஜெட் வழக்கமாக மார்ச் மாதத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த நிலையில், லோக்சபா பொதுத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதால் இன்றைய தினம் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நிதித் துறை பொறுப்பை ஏற்ற பிறகு, அமைச்சர் தங்கம் தென்னரசு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசித்த தங்கம் தென்னரசு, திருக்குறள் கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார்.
'காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லான் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்' என்ற திருக்குறளை கூறி முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து பேசி தனது பட்ஜெட் உரையை தங்கம் தென்னரசு தொடங்கினார்.
பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட தங்கம் தென்னரசு
காவல் குழவி கொள்பவரின் ஓம்புமதி அளிதோ தானே; அது பெறல்அருங் குரைத்தே" என்கிற புறநானூறு பாடல் வரியை பட்ஜெட் உரையில் மேற்கோள்காட்டினார் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.
இதன் பொருள்: ஒரு அரசன் தன்னுடைய குடிமக்களை, ஒருதாய் தன்னுடைய குழந்தைகளை காப்பது போல பாதுகாத்திட வேண்டும்' என்பதாகும்.
நான் பிறந்த விருதுநகர் மாவட்டத்தில் தோன்றிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சங்கத்தமிழ் பாடலில் குறிப்பிட்டு சொன்னதைப் போல,
"எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்"
இதன் அர்த்தம்.. "நீ ஒவ்வொரு அவதாரம் எடுக்கும் போதும், உன்னைவிட்டுப் பிரியாது உனக்குத் தொண்டு செய்து, உன்னடி போற்றுபவர்களுக்கு உன்னோடு உறவு உள்ளவர்களாக, நாங்கள் வந்து தொண்டு புரியவேண்டும். உன் ஒருவனுக்கே நாங்கள் தொண்டர்களாக இருந்து தொண்டூழியம் செய்ய வேண்டும்." என்பது பொருளாகும்.
என்ற வரிகளை நினைவு கூர்ந்து முத்தமிழ் அறிஞர் கலைஞர் உறங்கும் இடம் நோக்கி எனது உரையை நான் நிறைவு செய்கிறேன் என்று கூறி முடித்தார் தங்கம் தென்னரசு. அப்போது முதல்வர் உட்பட அமைச்சர்கள் உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாக நெகிழ்ச்சியுடன் கேட்டுக்கொண்டிருந்தனர்.
தங்கம் தென்னரசு ஆண்டாள் மீது பக்தி கொண்டவர். ஸ்ரீவில்லிபுத்தூரில் திருப்பாவை திருவிழா நடைபெறும் போது பங்கேற்று ஆண்டாள் பாசுரங்களை பாடியுள்ளார். கடந்த ஆண்டு திருப்பாவை விழாவில் பங்கேற்ற போது, பேசிய தங்கம் தென்னரசு, இனிய தமிழால் பாடப்பட்ட திருப்பாவை நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்றுள்ளது. நாலாயிர திவ்ய பிரபந்தம் திராவிட வேதம் என போற்றப்படுகிறது. எங்கள் ஊரான ஆண்டாள் அவதரித்த பூமியில் திருப்பாவை பாடிய உங்களுக்கு துறையின் அமைச்சர் என்ற முறையில் அனைவரும் சார்பாகவும் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் என்று கூறி திருப்பாவை பாசுரம் பாடினார்.
"ஓங்கி உலகளந்த உத்தமன்பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்துஓங்குபெருஞ் செந்நெ லூடுகய லுகள பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றிவாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்' என்ற ஆண்டாளின் பாடலுக்கேற்ப அனைவரும் எல்லா நலமும் பெற்று வாழ வேண்டும் என்று கூறினார்.
இன்றைய தினம் சட்டசபையில் திருக்குறளுடன் திருப்பாவை வரிகளை பாடி பட்ஜெட் உரையை நிறைவு செய்துள்ளார் தங்கம் தென்னரசு.












Click it and Unblock the Notifications