மூஞ்சிய உடைப்பேன்.. ஐயப்பன் ராமசாமிக்கு மிரட்டல்.. வசமாய் சிக்கிய டிடிஎப் வாசன்.. பாய்ந்த வழக்கு!
யூடியூப் ஊடகவியலாளரான ஐயப்பன் ராமசாமி தொடர்பான வீடியோ வெளியான நிலையில் ‛‛கையில் சிக்கினால் மூஞ்சிய உடைப்பேன்’ என டிடிஎப் வாசன் தெரிவித்து இருந்தார்.
சென்னை: யூடியூப் ஊடகவியலாளர் ஐயப்பன் ராமசாமியை ‛கையில் மட்டும் சிக்கினால் மூஞ்சிய உடைப்பேன்' என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய மற்றொரு யூடியூப் பிரபலமான டிடிஎப் வாசன் மீது கோவை போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள முத்துக்கல்லூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் பைக் பிரியர். இவர் தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல இடங்களுக்கு பைக்கில் டிராவல் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அப்போது அவர் பைக்கில் சாகசங்களை செய்து வருகிறார். இதுதொடர்பான வீடியோக்களை அவர் தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

சர்ச்சைகளில் டிடிஎப் வாசன்
இந்நிலையில் தான் டிடிஎப் வாசன் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார். குறிப்பாக போக்குவரத்து விதிகளை மீறி செல்வதாக டிடிஎப் வாசன் மீது அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது. இதுதொடர்பாக கோவை உள்பட பல இடங்களில் டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்குகளை பதிவு செய்துள்ளனர். அபராதம் செலுத்தியது உள்பட சில இடங்களில் அவர் மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்.

ஸ்டீங் ஆபரேஷன் வீடியோ
இந்நிலையில் தான் யூடியூப் ஊடகவியலாலரான ஐயப்பன் ராமசாமிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் டிடிஎப் வாசன் பேசியிருந்தார். அதாவது ஐயப்பன் ராமசாமி பேசுவதற்கு பணம், பொருட்கள் வாங்கியதாக ‛ஸ்டீங்க் ஆபரேஷன்' வீடியோ வெளியானது. இதில் வேறு சிலரும் சிக்கிய நிலையில் இணையதளங்களில் பேசும் பொருளானது. ‛ஸ்டீங்க் ஆபரேஷன்' என்ற ஹேஷ்டேக் டிரெண்ட்டானது.

மூஞ்சிய உடைப்பேன்
இதையடுத்து ஐயப்பன் ராமசாமியை மிரட்டும் வகையில் பேசி டிடிஎப் வாசன் வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில், பெண்கள் குறித்து ஐயப்பன் ராமசாமி இழிவாக பேசியுள்ளார். இதனால்‛கையில் சிக்கினால் மூஞ்சிய உடைப்பேன். எங்கு பார்த்தாலும் விடமாட்டேன்.' என டிடிஎப் வாசன் கூறியிருந்தார். இந்த வீடியோவில் இணையதளங்களில் பரவ தொடங்கியது.

வீடியோவில் இருந்தது என்ன?
இதுதொடர்பாக டிடிஎப் வாசன் வெளியிட்ட வீடியோவில், ‛‛கேவலம் பணத்துக்காக ஒருத்தரை பற்றி இழிவுப்படுத்தும் நபருக்கு மரியாதை கிடையாது. அவருக்கு ஆதரவாக இருக்கும் பெண்களையே சாப்ட்ருவாங்க என்று கேவலமாக பேசியுள்ளார். இந்த மாதிரியான ஆட்களை விட்டுவிட்டு சின்ன சின்ன விதி மீறல்களுக்கு எல்லாம் என்னை போன்ற ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஐயப்பன் ராமசாமியோட இன்டர்வியூவில் போட்டிருந்த அதே சட்டையை போட்டுகொண்டு அவர் மீது வெறியோடு இருக்கிறேன்... கையில் சிக்கினா மூஞ்சி, மொகரைய உடைப்பேன் அவ்வளோ வெறியில இருக்கேன்'' என கூறியிருந்தார்.

பாய்ந்த வழக்கு
அதாவது சமீபத்தில் ஐயப்பன் ராமசாமியின் இன்டர்வியூவில் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் மறுத்து பாதியில் டிடிஎப் வாசன் வெளியேறினார். இதையடுத்து டிடிஎப் வாசனை வைத்து பலரும் மீம்கள் கிரியேட் செய்திருந்தனர். இதன் காரணமாக தான் தற்போது டிடிஎப் வாசன் இந்த வீடியோ வெளியிட்டு உள்ளதாக கூறப்பட்டது. இதுதொடர்பாக கோவை காரமடை போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் டிடிஎப் வாசன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வன்முறையை தூண்டும் வகையில் பேசியதாக டிடிஎப் வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications