சென்னை வந்து கொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து.. அலறி அடித்து குதித்த பயணிகள்!
சென்னை: ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ பரவுவதை கண்ட பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர். தீ பரவுவதை பார்த்து அச்சத்தில் ரயிலில் இருந்து குதித்த பயணிகள் காயமடைந்துள்ளனர்.
சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில், ஹைதராபாத்தில் இருந்து நேற்று இரவு சென்னை தாம்பரத்துக்கு வந்து கொண்டிருந்தது. தெலுங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்தில் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டியின் சக்கரத்திலிருந்து புகை மற்றும் தீப்பொறி வந்துள்ளது.

சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் S5 பெட்டியில் தீ பரவி அடர்த்தியான புகை கிளம்பியுள்ளது. தீ பரவுவதைக் கண்ட பயணிகள் உடனடியாக அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். சிலர் ரயில் மெதுவாக ஓடிக்கொண்டிருந்த போதே, தீ பரவுவதை பார்த்து அச்சமடைந்து ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளனர்.
இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் எந்தவித உயிர்ச்சேதமும் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் ரயில்வே ஊழியர்களும் தீயணைப்புத் துறையினரும் விரைந்து வந்து தீ மற்ற பெட்டிகளுக்குப் பரவாமல் S5 பெட்டியை தனியாகப் பிரித்தனர். அதைத்தொடர்ந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தால் அந்த வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டது. பிரேக் பைண்டிங் (சக்கரம் சுழலாமல் பிரேக் ஜாம் ஆகுதல்) காரணமாக ஏற்பட்ட இந்த தீ விபத்தில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து தெற்கு மத்திய ரயில்வே வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், நேற்று ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட ஹைதராபாத் - தாம்பரம் சார்மினார் எக்ஸ்பிரஸ் ரயிலின் S5 பெட்டியில் பிரேக் பைண்டிங் ஏற்பட்டதன் காரணமாக, ஆலேர் ரயில் நிலையத்தில் இரவு 7:47 மணிக்கு நிறுத்தப்பட்டது.
பெட்டியின் சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறி காணப்பட்டதாகவும், அதை ரயில்வே ஊழியர்கள் உடனடியாக அணைத்ததாகவும் பிறகு ரயில் 20 நிமிடங்கள் தாமதமாக இரவு 8.10 மணிக்கு தாம்பரத்தை நோக்கிப் புறப்பட்டது என்றும், இதில் எந்த சேதமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications