தீபாவளிக்கு 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு
சென்னை: நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏற்கனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்கலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நவம்பர் மாதம் தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. பட்டாசு இல்லாத தீபாவளி வெளிச்சமாக இருக்காது. ஆனால் கடந்த சில ஆண்டு காலமாகவே பட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி பேரியம் குறைவான மற்றும் குறைவாக புகை வெளியிடும் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும், பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 1,400 பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. பட்டாசு வெடிப்பதற்கும் தயாரிப்பதற்கும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும், பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன
பேரியம் நைட்ரேட் உள்ளிட்ட வேதிப்பொருட்கள் பட்டாசு தயாரிப்பில் பயன்படுத்துவதால் உடலுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு ஏற்படுவதாக தெரிவித்து அவற்றுக்கு தடை விதிக்க கோரி அர்ஜுன் கோபால் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம் பசுமை பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும் என தீர்ப்பு கூறியது. தடை செய்யப்பட்ட வேதிப்பொருட்களைக் கொண்டு போலியான பசுமை பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்யக் கோரியும் அர்ஜுன் கோபால் இடைக்கால மனு தாக்கல் செய்தார்.
பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும், பசுமைப் பட்டாசு உற்பத்தி செய்ய விரைந்து ஒப்புதல் வழங்கக் கோரியும் தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு, கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் இடையீட்டு மனு தாக்கல் செய்தது.
இதுதொடர்பான மனுக்கள் நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்பனை செய்து வெடிக்க வேண்டும்.
பேரியம் மற்றும் சரவெடி தொடர்பான அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது தள்ளுபடி செய்கிறோம்; இரண்டுக்குமான தடை தொடரும் என கூறிய நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் இது தொடர்பான மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி எனவும சரவெடிக்கான தடை தொடரும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு அளித்தனர். மேலும் நாடு முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேரத்தில் மாற்றம் இல்லை எனவும். ஏற்கனவே உள்ள காலை 6 முதல் 7 மணி வரையும் மாலை 7 மணி முதல் 8 வரையும் பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க, விற்பனை செய்ய, வெடிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications