டென்ஷனான ரஜினி! இந்தியா-நியூசிலாந்து மேட்சில் நடந்தது என்ன? 100% உலககோப்பை நமக்குதான் என நம்பிக்கை
சென்னை: உலககோப்பை கிரிக்கெட் அரையிறுதியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து 100 சதவீதம் இந்தியாவுக்கு தான் உலககோப்பை என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில் நேற்றைய போட்டியில் நடிகர் ரஜினிகாந்துக்கு டென்ஷனை ஏற்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது
50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. குறிப்பாக இந்தியா 9 போட்டிகளிலும் வென்று புள்ளிபட்டியலில் 18 புள்ளிகள் பெற்று அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்து நேற்று முதலாவது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 397 ரன்கள் எடுத்தது.
இந்திய அணி தரப்பில் கேப்டன் ரோகித் ஷர்மா 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசினார். சுப்மன் கில் 80 ரன்கள் எடுத்தார். விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50 சதத்தை பூர்த்தி செய்து சச்சின் சாதனையை முறியடித்தார். அவர் 117 ரன் குவித்தார். ஸ்ரேயாஸ் அய்யரும் சதமடித்து 105 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 48.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 327 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன்மூலம் இந்தியா 70 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முதல் அணியாக நுழைந்தது. அதோடு கடந்த 2019ல் நடந்த 50 ஓவர் உலககோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை, நியூசிலாந்து அணி தோற்கடித்ததற்கு பழிதீர்த்தது. நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியை பொறுத்தமட்டில் அதிகபட்சமாக டாரில் மிட்செல் சதமடித்து இருந்தார். அவர் 134 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கேப்டன் கனே வில்லியம்சன் 69 ரன்களும், கிளைன் பிலிப்ஸ் 41 ரன்களும் எடுத்து அவுட்டாகி இருந்தவர்கள். இந்திய அணியை பொறுத்தமட்டில் 9.5 ஓவர்கள் வீசிய முகமது ஷமி 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
இந்த போட்டியை நடிகர் ரஜினிகாந்த மும்பை வான்கடே மைதானத்தில் தனது மனைவி லதாவுடன் சேர்ந்து நேரில் பார்த்தார். போட்டியின்போது ரஜினிகாந்த்துடன் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ செயலாளருமான ஜெய்ஷா, ஷிகர் தவான் உள்ளிட்டவர்கள் சிறிதுநேரம் அமர்ந்து போட்டியை கண்டுகளித்தனர். இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவின.
இந்நிலையில் தான் இந்தியா-நியூசிலாந்து போட்டியை பார்த்த பிறகு நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். சென்னையில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் 50 ஓவர் உலககோப்பை கிரிக்கெட் போட்டி குறித்தும், இந்தியா-நியூசிலாந்து இடையேயான அரையிறுதி போட்டி பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது. அதற்கு நடிகர் ரஜினிகாந்த் கூறியதாவது: நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் கொஞ்சம் டென்ஷன் ஆனேன். 2, 3 விக்கெட்டுகள் வரை ஒன்றரை மணிநேரம் டென்ஷனாக இருந்தேன். ஆனால் 100 சதவீதம் நமக்கு (இந்தியா) தான் உலககோப்பை'' என கூறி சென்றார்.
அதாவது நேற்றைய போட்டியில் நியூசிலாந்து அணியில் முதல் 2 விக்கெட்டுகள் வீழ்ந்தன. அதன்பிறகு கேப்டன் கனே வில்லியம்சன், டாரில் மிட்செல் ஜோடி சிறப்பாக விளையாடிது. இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 181 ரன்கள் சேர்த்து இந்தியாவை அலறவிட்டது. இவர்கள் 2 பேரின் பேட்டிங் தான் இந்திய ரசிகர்களை போல் நடிகர் ரஜினிகாந்தையும் நேற்றைய போட்டியில் டென்ஷனாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications