தமிழ்நாடு பட்ஜெட் 2023-24: மீனவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுமா? மீன்பிடி தடைக்கால நிதி உயருமா?
தமிழ்நாடு பட்ஜெட்டில் மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள் நிறைவேறும் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டை சட்டசபையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்கிறார். இன்றைய பட்ஜெட்டில் மீனவர்களுக்கான ஓய்வூதியம், மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி உயர்வு உள்ளிட்டவை மீனவர்களின் எதிர்பார்ப்பு.
தமிழ்நாடு பட்ஜெட் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் இது.

இன்றைய பட்ஜெட்டில் பெண்களுக்கு ரூ1,000 மாதாந்திர உதவித் தொகை, காலை சிற்றுண்டி விரிவாக்கம், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கான ஓய்வூதிய திட்ட விவகாரம் உள்ளிட்டவை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் மீனவர்களின் நீண்டகால கோரிக்கைகள், தேர்தல் வாக்குறுதிகள் இம்முறையேனும் நிறைவேறுமா? என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது. தற்போது 60 வயது கடந்த மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரண நிதி வழங்கப்படுவது இல்லை. 2007-ம் ஆண்டே மீனவர்களுக்கு ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆகையால் மீனவர்களுக்கு ரூ1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட வேண்டும் என்பது முதன்மை கோரிக்கை.

அடுத்ததாக மீன்பிடி தடைக்கால நிவாரண நிதியை ரூ8,000 ஆக உயர்த்த வேண்டும் என்பதும் மற்றொரு கோரிக்கை. மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இது தொடர்பான அறிவிப்பும் ஒவ்வொருமுறையும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீனவர்களுக்கு படகு, வலை, இயந்திரங்கள் வாங்குவதற்கான பல்வேறு மானியங்களையும் வழங்க வேண்டும் என்றும் கோரி வருகின்றனர். மீனவர்களின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா? என்பது இன்றைய பட்ஜெட்டில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications