"நீட் விலக்கு முதல் நிதி உரிமை வரை!" திமுக எம்பிக்கள் கூட்டத்தில் 5 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்
சென்னை: திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், இதில் ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லோக்சபா தேர்தல் முடிவுகள் கடந்த வாரம் வெளியானது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் திமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி அசத்தியது.

கடந்த முறை திமுக கூட்டணி தேனியைத் தவிர்த்து 39 தொகுதிகளில் வென்றிருந்த நிலையில், இந்த முறை 40 தொகுதிகளிலும் திமுக வேட்பாளர்களாக வெற்றி பெற்றனர்.
திமுக கூட்டணி: குறிப்பாகத் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் 22 பேர் போட்டியிட்டனர். திமுகவினர் 21 பேரும், கொமதேகவில் ஒருவரும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், இந்த 22 பேரும் வெற்றி பெற்றனர். இதற்கிடையே திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆலோசனைக் கூட்டம்: அதன்படி இன்று திமுக எம்பிக்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் நீட் விலக்கு, நிதி உரிமை உட்பட ஐந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக திமுக தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், "லோக்சபா தேர்தலில் 40க்கு 40 இடங்களிலும் வெற்றி பெறுவதற்கு வியூகம் வகுத்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கும் வெற்றிக்காக உழைத்த திமுக தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
ஐந்து தீர்மானங்கள்: தமிழகத்தில் 40க்கு 40 தொகுதிகளில் திமுக கூட்டணி வெல்லக் காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா, 40 தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக ஜூன் 14ஆம் தேதி கோவையில் கொண்டாடுவது என்பது முதல் தீர்மானம்.
நாடாளுமன்ற வளாகத்தில் அகற்றப்பட்ட தேச தலைவர்கள் சிலைகளை அதே இடத்தில் வைக்க வேண்டும் என்பது இரண்டாவது தீர்மானம்.. தமிழ்நாட்டின் திட்டங்களுக்காக நிதி உரிமை, மொழி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் அயராது குரல் கொடுப்போம் என்பது மூன்றாவது தீர்மானம்.
நீட் தேர்வு: நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். நீட் தேர்வை முற்றிலுமாக விளக்க வேண்டும் அல்லது தமிழ்நாட்டுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறோம் என்பது நான்காவது தீர்மானம்.
நாடாளுமன்றத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் இந்த கோரிக்கையை ஒன்றிய அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பது ஐந்தாவது தீர்மானம். இந்த ஐந்து தீர்மானங்களும் திமுக எம்பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications