'பாட்ஷா'.. வெடிகுண்டால் வெகுண்ட ரஜினிகாந்த்..கொந்தளித்த ஜெயலலிதா.. ஆர்.எம்.வீரப்பன் தனிக் கட்சி கதை!
சென்னை: மறைந்த தமிழ்நாட்டின் முதுபெரும் அரசியல் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், திராவிட கட்சிகளில் ஏற்பட்ட பல பிரளயங்களில் மவுன சாட்சியாக உடனிருந்தவர் என்கிறது சரித்திரம்.
பேரறிஞர் அண்ணா மறைவுக்குப் பின்னர் திமுகவில் சலசலப்புகள் ஏற்பட்டன. அப்போது முதல்வராக்கப்பட்ட கருணாநிதிக்கும் புரட்சி நடிகர் என கொண்டாடப்பட்ட எம்ஜிஆருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் உச்சத்தை எட்டியிருந்தன.

ஒருங்கிணைந்த திமுக உடையும் அபாயம் ஏற்பட்டது. அப்போது எம்ஜிஆருடன் திமுக தரப்பில் சமாதானப் பேச்சுவார்த்தை நடந்தது. அப்பேச்சுவார்த்தையில் எம்ஜிஆருடன் பங்கேற்றவர் ஆர்.எம்.வீரப்பன். முரசொலி மாறன், நாஞ்சில் மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்ற இப்பேச்சுவார்த்தை முடிவடையும் முன்னரே திமுக உடைந்தது.. அதிமுக உதயமானது.
எம்ஜிஆர் ஆட்சியில் நாவலர் நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்டோர் அசைக்க முடியாத வலது கரங்களாக இருந்தனர். 1980களின் தொடக்கத்தில் எம்ஜிஆரால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்டார் ஜெயலலிதா. எம்ஜிஆரின் இந்த நடவடிக்கையை தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் ஆர்.எம்.வீரப்பனும் ஒருவர். ஒரு கட்டத்தில் ஜெயலலிதா, அதிமுகவில் கோலோச்ச ஆர்.எம்.வீரப்பன் உளிட்டோர் கலகக் குரல் எழுப்பினர். அப்போது ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட பல சீனியர் அமைச்சர்களையே தூக்கி அடித்தார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட காலங்களில் அதிமுக எனும் கட்சியை கட்டுப்பாட்டுடன் தக்க வைத்தவர்களில் ஆர்.எம்.வீ. முதன்மையானவர். எம்ஜிஆர் மறைவுக்குப் பின்னர் 98 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஜானகி எம்.ஜிஆரை முதல்வராக்கியவரும் ஆர்.எம்.வீ.தான். அப்போது அதிமுகவின் ஜானகி அணியின் முகமாக இருந்தார் ஆர்.எம்.வீ.
பின்னர் அண்ணா திமுக ஒருங்கிணைக்கப்பட்டு ஜெயலிதா பொதுச்செயலாளராக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டார் ஆர்.எம்.வீரப்பன். ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார் ஆர்.எம்.வீ.
1995-ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவீஸ் தயாரித்த ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா படம் பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த படத்தின் வெள்ளி விழாவில் ஆர்.எம்.வீர, நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். இப்பட விழாவில் பேசிய ரஜினிகாந்த், ஜெயலலிதா ஆட்சியை மிகக் கடுமையாக விமர்சித்தார். வெடிகுண்டு கலாசாரம் பரவிவிட்டதாக சாடினார் ரஜினிகாந்த். இத்தனை விமர்சனங்களையும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீ. எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனமாக கேட்டுக் கொண்டிருந்தார். இது ஜெயலலிதாவை கொந்தளிக்க வைத்தது. இதனால் ஆர்.எம்.வீ. உள்ளிட்ட ஒட்டுமொத்த எம்ஜிஆர் காலத்து தலைவர்கள் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதன் பின்னரே எம்ஜிஆர் கழகம் எனும் தனிக்கட்சியைத் தொடங்கினார் ஆர்.எம்.வீரப்பன்!












Click it and Unblock the Notifications