Flash Back: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கண்ணீர் வடித்த நெல்லை கண்ணனின் உருக்கமான பேச்சு!
சென்னை: தாம் நம்பிய காங்கிரஸ் கட்சி கைவிட்டுவிட்டது; காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன், காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடந்த ஆண்டு நெல்லை கண்ணன் உருக்கமாக பேசியது அனைவரையும் உலுக்கியது.
Recommended Video
தமிழ்க் கடல் என போற்றப்பட்ட தமிழறிஞர் நெல்லை கண்ணன் இன்று நெல்லையில் உடல்நலக் குறைவால் காலமானார். தீவிரமான காங்கிரஸ்காரராக, திராவிட இயக்க எதிர்ப்பாளராக இருந்தவர் நெல்லை கண்ணன். ஆனால் இறுதிக் கால கட்டத்தில் இந்த நிலைப்பாட்டில் இருந்து சற்றே மாற்றிக் கொண்டார் நெல்லை கண்ணன்.
கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. அந்த விழாவிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். அம்பேத்கர் சுடர் விருது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், பெரியார் ஒளி விருது மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கும், காமராசர் கதிர் விருது நெல்லை கண்ணனுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் நெல்லை கண்னன் பேசிய பேச்சு மிகவும் உருக்கமானதாக இருந்தது. அதில் நெல்லை கண்ணன் பேசியதாவது: திருமாவின் மேடையில் மடிந்தால் திருமாவின் மடியில் தானே மடிவேன் அதுதான் எனக்கு பெருமை. அந்த பெருமை கிடைத்தால் போதும். என் பொது வாழ்க்கையில் எனக்கு இப்படி ஒரு விருது கொடுத்து என்னை இதுவரை யாரும் கௌவரப்படுத்தியது இல்லை.
முதல்வரிடம் கைகூப்பி கேட்கிறேன். முதல்வரிடமும், திருமாவிடமும் நான் கேட்டுக்கொள்வது உடல்நலத்தை பார்த்துக்கொள்ளுங்கள். உங்களின் விழிவட்டப் பார்வையில் என்னையும் வைத்துக்கொள்ளுங்கள். இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் வேறு யாறும் இல்லை. வட மாவட்டத்திற்கு தலைவன் திருமா தான். காங்கிரஸ் கட்சிக்காக என் வாழ்க்கையை இழந்தேன். காங்கிரஸ் கட்சி எனக்கு ஒன்றுமே செய்யவில்லை .
இரண்டாம் விடுதலை போரில் விடுதலை வாங்கி தந்தவர் நீங்கள் தான். முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று நீங்கள் பொறுப்பு ஏற்கும் போது, உங்களது மனைவி கண்ணீர் வடித்தார்கள். நானும் கண்ணீர் வடித்தேன். 40 ஆண்டுகளுக்கு முன்பே என்னை கருணாநிதி அழைத்ததார். அப்போது எனக்கு புத்திக்கு அது உரைக்கவில்லை. கருணாநிதியை எதிர்த்து தன்னை நரசிம்மராவ் தான் வலுகட்டாயமாக தேர்தலில் போட்டியிட வைத்தார். இன்று அரசியல் அநாதையாக்கிவிட்டார்கள். இவ்வாறு நெல்லை கண்ணன் அப்போது பேசினார்.
இப்பேச்சைக் கேட்டு திருமாவளவன் மேடையிலேயே கண்ணீர் சிந்தினார். அனைவரது நெஞ்சிலும் ஆழப் பதிந்த நெல்லை கண்ணனின் உருக்கமான பேச்சாக இது அமைந்துவிட்டது.