"கட்டுக்கோப்பான இயக்கம்" கட் அவுட்கள், பேனர்கள் வைக்கக் கூடாது.. கட்சியினருக்கு திமுக தலைமை உத்தரவு
சென்னை: கழக பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் எதிலும் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படும் வகையிலும் மக்களுக்கு இடையூறாகவும் பேனர்கள், கட் அவுட்கள்,பிளெக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது என்றும் இந்த அறிவுரையை கடைபிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலை நாட்டிட வேண்டும் என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ் பாரதி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக நிகழ்ச்சிகளில் கட் அவுட்கள், பேனர்கள் போன்றவை வைக்க தடை விதிக்கப்படுவதாக அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுக அமைப்புச்செயலாளார் ஆர்.எஸ் பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது:-

அதிமுக ஆட்சியின் போது
கடந்த 2019 ல் நடைபெற்ற அதிமுக ஆட்சியின் போது பேனர் கலாசாரத்தால் இருவர் உயிரிழந்தனர். அப்போது திமுக பொதுக்கூட்டங்கள் எதிலும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் வகையில் பேனர்கள், கட் அவுட்கள், பிளெக்ஸ் போர்டுகள் வைக்கக்கூடாது என்று 13.09.2019 அன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அன்றைய நாள் முதல் கட்சியினர் பலரும் தலைவர் உத்தரவினை பின்பற்றி வந்தனர். மீறியவர்கள் மீது கட்சி நடவடிக்கையும் எடுத்தது.

கட் அவுட்கள் வைக்கக் கூடாது.
இந்த நிலையில், ஒரு சிலர் தற்போது தலைவர் உள்ளிட்ட கட்சி முன்னோடிகள் பங்கேற்கும் நிகச்சிகளில் பொதுமக்கள் முகம் சுழிக்கும் வண்ணம் பேனர், கட் அவுட், பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதாக தலைமையின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கழக பொதுக்கூட்டம் நிகழ்ச்சிகள் எதிலும் போக்குவரத்திற்கு சிரமம் ஏற்படும் வகையிலும் மக்களுக்கு இடையூறாகவும் பேனர்கள், கட் அவுட்கள், பிளெக்ஸ் போர்டுகள் வைக்கக் கூடாது.

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
திமுக தலைவரின் ஒப்புதலோடு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை யாராவது மீறியதாக கட்சியினுடைய தலைமை அலுவலகத்திற்கு புகார் வருமேயானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். எனவே கட்சியினர் இந்த அறிவுரையை கடைபிடித்து திமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கம் என்பதை நிலை நாட்டிட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவாளர்களுக்கு இடையே மோதல்
திருச்சி மாநகராட்சியால் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை திறந்து வைப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான கல்வெட்டு, பதாகைகளில் அதே பகுதியில் வசித்து வரும் திமுக மாநிலங்களவை குழு தலைவர் எம்பி திருச்சி சிவாவின் பெயர், படம் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்நிகழ்ச்சியில் பங்கேற்க அவருக்கு அழைப்பும் விடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இது தொடர்பாக இரு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு காவல் நிலையம் வரை பிரச்சினை சென்றது. இந்த நிலையில் திமுக தலைமை பேனர்கள் வைக்க கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications