மீண்டும் பரபரக்கும் அமைச்சர்களின் அறைகள்! நிற்க நேரமின்றி ஓடும் அதிகாரிகள்! முழுவீச்சில் பணிகள்!
சென்னை: இதுவரை தேர்தல் பணிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அமைச்சர்கள், இப்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் ஒரு வழியாக முடிந்துவிட்டதால் துறை ரீதியான பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர்.
மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதால் அது தொடர்பான கோப்புகளை நகர்த்துவதில் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதனால் கடந்த ஒரு மாதமாக தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர்களின் அறைகள் ஆள் அரவமின்றி அமைதியாக இருந்த நிலையில் இப்போது மீண்டும் பரபரப்புடன் காணப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி
தமிழகம் முழுவதும் கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதோடு 22-ம் தேதி அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க வேண்டி அனைத்து அமைச்சர்களும் சொந்த ஊர்களில் முகாமிட்டு தேர்தல் பணிகளில் பிஸியாக இருந்து வந்தனர். இதனால் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அவர்களது அறைகள் ஆள் அரவமின்றி அமைதியாக காணப்பட்டது.

தேர்தல் முடிந்தது
ஆனால் இப்போது தேர்தல் முடிந்துவிட்டதால் மீண்டும் அமைச்சர்கள் அனைவரும் அவரவர் துறை சார்ந்த பணிகளில் பிஸியாக இருக்கின்றனர். அமைச்சர்கள் வராததால் இதுவரை ரெஸ்ட் எடுத்து வந்த அதிகாரிகள் கடந்த 2 நாட்களாக நிற்க நேரமின்றி கோப்புகளுடன் ஓட்டமும், நடையுமாக இருப்பதை காணமுடிகிறது. வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தேர்தல் முடிவு வெளிவந்த அடுத்தநாளே தனது துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தை நடத்திவிட்டார்.

அமைச்சர்களின் அறைகள்
மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அதற்கு நாட்கள் மிகவும் குறைவாக இருப்பதால் பட்ஜெட்டில் தங்கள் துறைகளுக்கான நிதியை பெறும் விவகாரத்தில் கவனமுடன் செயல்பட்டு வருகின்றனர் அமைச்சர்கள். தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் அமைச்சர்களின் அறைகளில் எப்படி கூட்டம் நிரம்பி வழிந்ததோ அதேபோல் இப்போதும் மீண்டும் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியிருக்கிறது.

மக்களுக்கு பரிசு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுக்கு பெருவாரியான வெற்றியை கொடுத்துள்ள நகர்ப்புற மக்களுக்கு வரும் பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே அமைச்சர் கே.என்.நேரு வசம் உள்ள நகராட்சி நிர்வாகத்துறைக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications