வழிக்கு வருமா ஸ்விக்கி, சோமேட்டோ.. நாமக்கல் ஹோட்டல் உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: கமிஷன் தொகை ஆன்லைனில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே மாதிரியாக வசூலிப்பது இல்லை எனவும் கடைக்கு கடை கமிஷன் தொகை மாறுகிறது என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இந்த நிலையில், இன்று முதல் நாமக்கலில் ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு உணவு டெலிவரி சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே மாதிரியான கமிஷன் தொகை, மறைமுக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இந்த போராட்டத்தை அறிவித்து இருப்பதாக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் உணவு டெலிவரி சேவையில் ஸ்விக்கி, சோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. பெருநகரங்கள் மட்டும் இன்றி சிறிய அளவிலான நகரங்கள் வரை ஸ்விக்கி, சோமேட்டோ உணவு நிறுவனங்கள் தனது சேவையை விரிவுபடுத்தியுள்ளன. வீட்டில் இருந்து கொண்டே பிடித்த உணவகங்களில், பிடித்த உணவு பொருளை ஆர்டர் செய்து சாப்பிட முடியும் என்பதால், பலரும் ஸ்விக்கி, சோமேட்டோவில் உணவு ஆர்டர் செய்வதை பார்க்க முடிகிறது.
வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு
சென்னை போன்ற நகரங்களில் எல்லாம் சாலைகளில் உணவு டெலிவரி சேவை ஊழியர்கள் எப்போதும் பரபரப்பாக இயங்குவதை பார்க்க முடிகிறது. நள்ளிரவில் கூட உணவு டெலிவரி சேவையில் ஈடுபட்டு வருகிறார்கள். ஹோட்டல்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு உணவை எடுத்து செல்ல குறிப்பிட்ட தொகையினை கமிஷனாக இந்த நிறுவனங்கள் வசூலித்துக்கொள்கின்றன. அதுபோக, வாடிக்கையாளர்களிடமும் பிளாட்பார்ம் கட்டணம் என வசூலிக்கின்றன.
அதேநேரம் தற்போது மெல்ல மெல்ல ஆன்லைன் தளங்களில் உணவுகளின் விலை அதிகரித்து இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஒரே உணவை ஹோட்டல்களில் ஒரு விலையாகவும் ஆன்லைன் தளத்தில் வேறு விலையாகவும் உள்ளதாக வாடிக்கையாளர்கள் கூறுகிறார்கள்.
ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்கள்
மேலும், டெலிவரி சார்ஜ், பிளாட்பார்ம் பீஸ், பேக்கிங் பீஸ் என ஏகப்பட்ட கூடுதல் கட்டணங்களையும் போட ஆரம்பித்தன. இது ஒருபக்கம் என்றால் உணவகங்களிலும் கமிஷன் என்று அதிகத் தொகை பிடித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்த வண்னம் உள்ளன. கமிஷன் அதிகம் ஆன்லைனில் ஸ்விக்கி, சொமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒரே மாதிரியாக வசூலிப்பது இல்லை எனவும் கடைக்கு கடை கமிஷன் தொகை மாறுகிறது என்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
அது மட்டும் இன்றி ஹோட்டல்களில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்யும்போது அந்தப் பணம் ஒரு வாரம் கழித்தே உரிமையாளர்களுக்குச் செல்கிறதாம். அப்போது அந்த தரவுகளை எடுத்துப் பார்த்தால் ஏகப்பட்ட சார்ஜ்கள் மற்றும் கமிஷன்களை போடுவதாக சொல்லப்படுகிறது.
உணவு டெலிவரி சேவை நிறுத்தம்
இதனால் பெரியளவில் நஷ்டம் ஏற்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் சொல்கிறார்கள். இதற்கு முதலில் நாமக்கல் பேக்கரி மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். மேலும், ஜூலை 1ம் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்தில் சுவிக்கி, சொமேட்டோ மூலம் உணவு வழங்கப்படுவது நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று முதல் நாமக்கலில் ஸ்விக்கி, சோமேட்டோவிற்கு உணவு டெலிவரி சேவை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் உரிமையாளர்கள் போராட்டம்
அதாவது, Zomoto, Swiggy நிறுவனங்களுக்கு நாமக்கல் தாலுக்காவில் உள்ள ஹோட்டல்கள், பேக்கரிகளில் இருந்து இன்று முதல் உணவு வழங்கப்படாது எனவும், ஒரே மாதிரியான கமிஷன் தொகை, மறைமுக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாததால் இந்த போராட்டத்தை அறிவித்து இருப்பதாக நாமக்கல் தாலுக்கா ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஹோட்டல் உரிமையாளர்களும் இதேபோல போராட்டத்தில் ஈடுபட போவதாக ஸ்விக்கி சோமேட்டோ நிறுவனங்களை எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாககியுள்ளது.












Click it and Unblock the Notifications